பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியானது.



’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.


கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.


பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர், கோலிவுட் நடிகர்,நடிகைகள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டனர்.


நடிகர் கமல், சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் முன்னதாக இந்த விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்க அவர்களை ஊமைராணி காப்பாற்ற வரும் வகையில் முடிந்திருந்தது.


இந்நிலையில் அதற்கு பின் சோழ சாம்ராஜ்யத்தில் ஏற்படும் குழப்பம், ஊமைராணிக்கும் சுந்தர சோழருக்கும் உள்ள தொடர்பு, தஞ்சைக்கு மீண்டும் திரும்பும் ஆதித்த கரிகாலன், நந்தினியை மீண்டும் சந்திப்பது என படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.  இந்த ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.