மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் 2ஆம் பாகம் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில்  ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா,ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. 60 ஆண்டுகால சினிமாவின் கனவுப்படம் என்பதால் ரசிகர்கள் முதல் பாகத்தை கொண்டாடி தீர்த்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். தாங்கள் கேட்டு, படித்த கதை கண்முன்னே காட்சிகளாக விரிவதை கண்டு நெகிழ்ந்து போயினர். இதனால் லைகா நிறுவனம் தயாரித்திருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம்  ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.






இதனிடையே இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அப்படம்  கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. ஆனால் நாவலில் இருந்து கிளைமேக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகள் மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. முதல் பாகம் போல விறுவிறுப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனாலும் ஓரளவு வசூலை இப்படம் பெற்றது. ரூ.350 கோடிக்கும் மேலாக வசூலைப் பெற்றதாக சொல்லப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 2 கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமேசாம் பிரைம் ஓடிடியில் வெளியானது. இதனை ஓடிடியில் பலரும் பார்த்தனர். 


இப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் 2 டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க: ‘வீரப்பன் நம்பிக்கை துரோகம் செய்தாரா?’ .. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்.. வெப் தொடரால் வெடித்த சர்ச்சை..!