மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இதைத்தொடர்ந்து த்ரிஷா மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியதோடு, இனி எந்த படத்திலும் மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார்.


மன்சூர் அலிகான் விவகாரம்:


த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ், பாரதிராஜா, எம்.எஸ்.பாஸ்கர், சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஆனால் மன்சூர் அலிகான் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கூறினார். மேலும் நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு எதிராகவும் அவர் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.


இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார்.


மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்


இந்நிலையில் மன்சூர் அலிகான்  த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என குறிப்பிட்டிருந்தார்.


மன்னித்த த்ரிஷா


இதனையடுத்து த்ரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: ”தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு” என பதிவிட்டுள்ளார். ஒருவாரமாக நடைபெற்ற பிரச்சினைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை


இந்நிலையில் இந்த அறிக்கையில் மன்னித்துவிடு என நான் கூறவே இல்லை. மரணித்துவிடு என கூறியதை பி.ஆர்.ஓ தவறாக புரிந்து கொண்டு மன்னித்துவிடு என எழுதிவிட்டார். போனில் சொன்னதால் இந்த தவறு நடந்து விட்டது என கூறி, சமீபத்தில் புதிய குண்டை தூக்கி போட்டார் மன்சூர் அலிகான்.


த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்


இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம் தொடர்பாக த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியவை சர்ச்சையான நிலையில், விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். 


மேலும் படிக்க 


Rajesh Das IPS : ‘பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு?’ அமுதா ஐ.ஏ.எஸ் அதிரடி..!


CM MK Stalin Meeting: சென்னைக்கு செக் வைக்கும் மிக்ஜாம் புயல்! அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!