மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியிலிருந்து..


நான் ஆச்சர்யமான மனிதனாகப் பார்க்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். நான் தோய்வு, ஓய்வு இல்லாமல் இன்னும் இன்னும் வீரியத்துடன் இயங்க என்னக் காரணம் எனக் கேட்கிறீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது தமிழ். உண்மையில் நான் ஒரு வெறும் கம்பி. அந்தக் கம்பிக்குள் தமிழ் என்ற மின்சாரம் செல்கிறது. தமிழ் வீரியமானது. அதனால், சில லட்சம் கிலோவாட் மின்சாரம் பாய்கிறது. அதனால் நான் வீரியமாக இருக்கிறேன். மேலும், நான் நானாக இருக்கிறேன். நான் உழைக்கிறேன். அதனால் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன்.
இந்தத் தமிழ் என்பது சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் தொடர்ச்சியானது. நான் தமிழை சுவாசிக்கிறேன். அதனால் வாழ்கிறேன்.


இன்றைய இளைஞர்கள் நேர மேலாண்மையில் கோட்டை விடுகின்றனர். நேரத்தை கையாள திட்டமிடுதல் அவசியம். நேரம் தான் பணம், செல்வம், ஒழுக்கம், செல்வாக்கு, மரியாதை. நான் கலைஞரைப் பார்க்க நேரம் கேட்டு அவர் அதற்காக காலை 9.30 மணியை ஒதுக்கியிருந்தால். அதற்காக திட்டுமிடுவேன். எனது வீட்டுக்கும் கலைஞர் வீட்டுக்கும் 8 கி.மீ தூரம் தான் தொலைவு. அதை அடைய 30 நிமிடம் போதும் என்று வழிகாட்டி சொல்லும். ஆனால், நாம் 50 நிமிடங்கள் முன்னால் செல்வேன். ஒருவேளை போக்குவரத்து நெரிசல், வேறு இடர்பாடு ஏற்பட்டால் என்று திட்டமிட்டு 20 நிமிடங்கள் முன்னர் செல்வேன். குறித்து நேரத்துக்கு தாமதித்துப் போவது இழிவு. அதேபோல் குறித்த நேரத்துக்கு முன்பே சென்று காத்திருப்பது உன்னை நீயே அவமரியாதை செய்வதற்குச் சமம். 9.30 மணி சந்திப்புக்கு 9.27க்கு நுழைவதே தெளிவு. 




மனித வாழ்வில் சோம்பேறித்தனம் இழப்பைத் தரும். மதன் கார்க்கிக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நீ சூரியனுக்கு முன்பு எழுகிறவனாக இரு. அப்படியென்றால் நீ சூரியவனை ஜெயிக்கிறவனாக இருப்பாய் என்றேன். ஏனெனில் அதிகாலை நேரம் தான் நாம் சிந்திக்கும் நேரம். அதிகாலையில் எழுகிறவன் இரவில் ஒழுக்கமாக இருக்கிறான் என்று அர்த்தம்.  சிந்திப்பதற்கு அதிகாலை பொழுது, மனிதர்களை சந்திப்பதற்கு பகல் பொழுது.


அதேபோல்,  பசி உடம்புக்கு நேர்ந்தாக வேண்டிய அறிவியல் உணர்வு. பசியில்லாவிட்டால் ஆரோக்யம் இருக்காது. பசி இருந்தால் தான் சுறுசுறுப்பாக இருப்பான். பசி இருக்கும்வரை தான் உழைப்பான். பசி எப்படி முக்கியமோ வாழ்க்கைக்கு பயமும் முக்கியம். இதற்கு வள்ளுவர் வாக்கே பொறுத்தமானது. அவர், அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சல் அறிவார் தொழில் என்று கூறியிருக்கிறார். அதுபோல் அச்சப்பட வேண்டியது எதுவென்று பகுப்பாய்வு செய்யாவிட்டால் வாழ்வு வசப்படாது.


மூன்றாவது விஷயம் காமம். மனிதனின் காமம் என்பது உரிமையுள்ள திரியில் எரிந்தால் தீபம் போல் ஒளி வீசும். அதுவே உரிமையில்லா இடத்தில் எரிந்தால் பாவம் வந்து சேரும்.


இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.