ஓ.என்.வி இலக்கிய விருதைத் திருப்பி கொடுப்பதாகவும், பரிசுத் தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.


திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு கேரளாவின் உயரிய ஓ.என்.வி.குறுப்பு இலக்கிய விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.  அறிவிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். Metoo விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஓ.என்.வி.குறுப்பு பெயரால் விருதா எனக் கொதித்தார்கள் கலைஞர்கள் சிலர். மலையாள நடிகர் பார்வதி, ரிமா கலிங்கல், வைரமுத்துவுக்கு எதிராகப் புகார் எழுப்பியவர்களில் ஒருவரான பாடகர் சின்மயி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இதையடுத்து  விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என சம்மந்தப்பட்ட அகாடெமி அறிவித்துள்ளது. 


                     


 


இந்நிலையில், ஓ.என்.வி இலக்கிய விருதைத் திருப்பி கொடுப்பதாகவும், பரிசுத் தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்து; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். 


ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவினர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். 


அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். 


ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன். 


ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். 


மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். 


தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி’ எனக் கூறியுள்ளார்.