நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பதான்”. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது.


குறிப்பாக பாடல் காட்சி ஒன்றில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனமாடியிருந்தார். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக சர்ச்சை எழுந்தது. போலீசில் புகார், ஷாரூக்கான் உருவபொம்மை எரிப்பு, தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த பதான் பட பேனர்கள் கிழிப்பு என தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


எதிர்ப்புகளை தொடர்ந்து பதான் படம் மறுதணிக்கை செய்யப்பட்டு சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் தான் பேனர் கிழிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு போன் செய்து பேசிய ஷாரூக்கானிடன், முதலமைச்சர் படம் வெளியாக தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார். 


100க்கு மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படமான பதான் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது கிட்டதட்ட 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பதான் படத்தை முதல் காட்சி பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.