உர்ஃபி ஜாவத்:


ராக்கி சாவந்துக்குப் பிறகு பாலிவுட் திரையுலகை தன் உச்சபட்ச கவர்ச்சியால் கதிகலங்க வைத்து வருபவர் உர்ஃபி ஜாவேத்.


ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்.


கவர்ச்சியில் உச்சம்:


சைக்கிள் செய்ன், கோணிப்பை, கயிறு, மீன்வலை தொடங்கி தன் கையில் கிடைக்கும் எந்தப் பொருளையும் வீணாக்காமல் அதில் ஆடை தைத்து அணிந்து சமூக வலைதளங்களில் சூறாவளியாக செயல்பட்டு வருகிறார் உர்ஃபி.


ஆனால் உர்ஃபி இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்தே வருகிறார்கள். ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.


அதேபோல் எதற்கும் அஞ்சாமல் கருத்துகளை தன் சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடியாய் முன்வைத்து வரும் உர்ஃபியின் தற்போதைய பதிவு கவனமீர்த்துள்ளது.


சிரிப்புக்கு பின்னால் சோகம்:


என்னதான் சமூக வலைதளங்களில் மிதமிஞ்சிய கவர்ச்சியுடன் ஜாலியாக உலா வந்தாலும் தன் சிரிப்புக்கு பின்னால் உள்ள வாழ்வியல் சிக்கல்களைப் பகிர்ந்துள்ளார் உர்ஃபி.


அதன்படி, மும்பையில் தனக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிவிட்டுள்ள உர்ஃபி, “நான் உடுத்தும் உடை காரணமாக முஸ்லிம் உரிமையாளர்கள் எனக்கு வீடு வாடகைக்கு விட விரும்பவில்லை.


மற்றொருபுறம் நான் முஸ்லிம் என்பதால் இந்து உரிமையாளர்கள் எனக்கு வீடு வாடகைக்கு விட விரும்பவில்லை. மேலும் சில வீட்டு உரிமையாளர்களுக்கு எனக்கு வரும் அரசியல் அச்சுறுத்தல்களால் சிக்கல்.


மும்பையில் ஒரு வாடகை வீட்டை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது” எனப் பதிவிட்டுள்ளார். உர்ஃபியின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள், உர்ஃபிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


 






பிரபல எழுத்தாளருடன் சண்டை


முன்னதாக தன் உடை குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சேதன் பகத்துக்கு உர்ஃபி பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.


“இந்தக் காலத்தில் இளைஞர்கள் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல் பார்த்து அதிக நேரம் செலவழிப்பது அவர்களுக்கு பெரும் கவனச்சிதறலாக உள்ளது. உர்ஃபி ஜாவேத் யார் என அனைவருக்கும் தெரியும்,'' எனப் பேசியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாலியல் வன்முறை கலாச்சாரத்தை சேதன் பகத் ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சேத்தனை சாடிப் பதிவிட்டிருந்தார். மேலும் ’மீ டூ’ புகார்கள் எழுந்தபோது சேத்தன் பகத்தும் பாலியல் புகார்களில் சிக்கி அவரது ஆபாச உரையாடல்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்ட நிலையில், அவற்றைப் பகிர்ந்தும் உர்ஃபி சேத்தனை கடுமையாக சாடினார். பாலிவுட்டில் இந்தச் சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.