நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். இந்த படம் இரு தேசிய விருதுகளை வென்றது. இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப்படம், ஆசியாவிலேயே முதன்முதலாக சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகின. இந்த திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி சாதனையாக திட்டமிட்ட பார்த்திபன் அதற்காக, பல நாட்கள் பயிற்சி எடுத்து அரங்குகள் அமைத்து 250 தொழிலாளர்களுடன் படமாக்கி உள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் அமைப்புகள் 'இரவின் நிழல்' படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என அங்கீகரித்துள்ளது.



இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சற்றுமுன் தான் இந்த படத்தை பார்த்தேன் பார்த்ததும் என்னால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்த வீடியோவை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் உடனடியாக பதிவு செய்கிறேன். இரவின் நிழல் படத்தை பார்த்து பிரம்மித்து போனேன். நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் இந்த மனுஷன் என்று தோன்றுகிறது.


காட்சிக்கு காட்சி பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது. பார்த்திபனுக்கு சினிமா மீது பைத்தியம் பிடித்திருக்கிறது. சாதாரணமாக ஒரு படத்திற்கு இசை அமைப்பது போல இந்த படத்திற்கு இசையமைக்க முடியாது, முதலில் படத்தின் கதை என்ன என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இசை அமைக்க முடியும் அதை அழகாக செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். கதையோட்டத்திற்கு ஏற்ப 64 ஏக்கரில் 59 அரங்குகளில் பிரமாண்டமான செட், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் என்பதை நினைக்கும் போதே பிரம்மிப்படைவதாக கூறியுள்ளார்.



மேலும் அவர் பேசுகையில், "இந்த படத்தை திரையிடும் முன் படத்தின் மேக்கிங்கை ஒரு 29 நிமிடங்களுக்கு திரையிட்டார்கள். உலகெங்கும் திரைப்படம் திரையிடும் முன்பு இந்த மேக்கிங் விடியோ முன்னாள் போடப்படும் என்று பார்த்திபன் கூறினார். அதை பார்ப்பதற்கே நமக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த படத்திற்காக 90 நாட்கள் ரிகர்சல் மட்டும் செய்திருக்கிறார்கள். ஏனெனில், இது நான் லினியர் திரைப்படம், ஒரு ஆர்ட்டிஸ்ட் அடுத்த செட்டுக்குள் கேமரா போவதற்குள் காஸ்ட்யூம் மாற்றுக்கொண்டு சென்று நிற்க வேண்டும். அதற்கு காஸ்ட்யூமுடன் காஸ்ட்யூம் டிசைனர் தயாராக இருக்க வேண்டும். அதுவும் பெண்கள் எல்லாம் சேலையை கழட்டிக்கொண்டே ஓடி உழைத்ததெல்லாம் நம்மால் மேக்கிங் விடியோவில் காண முடிகிறது.


இதில் ஒரே ஒரு சிறிய தவறு நிகழ்ந்தால், ஒரு செக்கண்ட் மிஸ் ஆனால் மீண்டும் முதலில் இருந்துது எடுக்க வேண்டும். முதலில் 3 வது நிமிடத்தில் ஒரு தவறு நடக்கிறது, மீண்டும் எடுக்கிறார்கள். தவறென்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. அதே போல ஐந்தாவது நிமிடத்தில், 20 வது நிமிடத்தில் என்று ஒவ்வொன்றாக தவறு நடக்கிறது, மீண்டும் மீன்டும் எடுக்கிறார்கள். இந்த படத்தை ஸ்டேஜ் செய்து ஷூட்டிங் செய்த போது மொத்தம் 22 முறை சொதப்பி, 23 வது முறை சரியாக எடுத்து முடித்துள்ளனர். அதுவும் 101 நிமிடம் உள்ள படத்தில் 22 வது முறை சரியாக 91வது நிமிடத்தில் சொதப்பி, மீண்டும் முதலில் இருந்து எடுத்துள்ளனர். எல்லாம் முடித்து பார்த்திபன் 'ஷாட் ஓகே', என்று சொல்வதை கேட்கும்போதே அனைவர் கண்களும் கலங்கி விடுகிறது." என்று கூறினார்.