பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் ஒடிடியில் வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் பிரைமில் வெளியான இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக எடுக்கப்பட்டிருந்தது. இரண்டு பரம்பரைகளுக்கு இடையே  நடக்கும் குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் கூட அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி படத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களோடு ஒன்றியிருந்தனர்.  சார்பட்டா பரம்பரை  பா.ரஞ்சித்திற்கு மட்டுமல்லாமல் அதில் நடித்த நடிகர்களுக்கும் கூட கெரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னதாக ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தின் வெற்றியை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே சார்ப்பட்டா பரம்பரை படத்தை உருவாக்கியதாக இயக்குநர் பெருமிதம் தெரிவிக்கிறார்.  இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரையில் ஒரு கதையை படமாக்குவதற்கு முன்னதாக , அதனை நாவலாக எழுதுவதை வழக்கமாக கொண்டிருப்பாராம். ஒரு நாவலை எழுதி முடித்த பின்னர்தான் அதற்கான திரைக்கதை வடிவம் கொடுப்பாராம். அப்படி நாவலில் இருந்து உருவானதுதான் ‘சார்பட்டா பரம்பரை ‘ திரைப்படமும். 




இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை வெப் சீரிஸாக எடுக்கும் எண்ணம் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” சார்ப்பட்டா பரம்பரை கதையை 1980 களில் நடந்த கதை போல எடுக்க யோசித்தோம், படத்தின் இறுதி காட்சிகளில் எம்.ஜி.ஆர் பரிசளிப்பது போல காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டோம் ஆனால் படத்தின் சூழலுக்கு அது ஏற்றதாக  இருக்காது என அந்த முயற்சியை கைவிட்டுவிட்டொம். படத்தின் மற்ற கோணங்களை படமாக்கும் எண்ணம் உள்ளது  அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம் “ என தெரிவித்துள்ளார்.




சார்பட்டா பரம்பரை படம் கபிலன் பார்வையில் எடுக்கப்பட்ட திரைப்படம் .இதனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் எடுக்க திட்டமிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையை பா.ரஞ்சித், தமிழ் பிரபா, கரன் கார்க்கி, பாக்கியம் சங்கர் என நால்வரும் எழுதி வருகிறார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. பா.ரஞ்சித் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இது முழுக்க முழுக்க காதல் சப்ஜக்ட்டை சுமந்து உருவாக உள்ளது. இதில் காதலில் வெவ்வேறு கோணங்களை காட்சிப்படுத்த உள்ளாராம் இயக்குநர். இந்த படத்தில் காளிதாஸ் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். முன்னதாக தினேஷ் கதாபாத்திரத்தில் அசோக் செல்வனை நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.