கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தில் இடம்பெற்ற காட்சியால் இணையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


ஓப்பன்ஹெய்மர்


‘அணு ஆயுதத்தின் தந்தை’ என்று சொல்லப்படுபவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர். பல்வேறு எதிர்ப்புகள், பல ஆண்டு முயற்சிகளுக்குப் பிறகு அபாயகரமான அணு குண்டைக் கண்டுபிடித்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்கி இருக்கிறார் ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.


ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை


புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தைத் தழுவி இப்படத்தை உருவாகியிருக்கிறார் நோலன். இந்தப் புத்தகத்தில் ஓப்பன்ஹெய்மர் குறித்து கூறப்பட்டிருக்கும் தகவல்களால் ஈர்க்கப்பட்டு இந்தப் படத்தை அவர் இயக்க முடிவு செய்துள்ளார்.


ஓப்பன்ஹெய்மர் பற்றி நாம் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதையில் மிகத் தீவிரமான வாசகராக இவர் இருந்திருக்கிறார் என்பது. தற்போது ஓப்பன்ஹெய்மர் படத்திலும் பகவத் கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த வாசகம் இடம்பெற்ற காட்சி இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


பகவத் கீதையின் வாசகன்


பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஓப்பன்ஹெய்மர் எப்போதும் ஒரு பிரதியை தனது படுக்கைக்கு அருகில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1933ஆம் ஆண்டு பகவத் கீதையை அதன் மூல மொழியான சமஸ்கிருதத்தில் படிக்க அந்த மொழியையும் ஓப்பன்ஹெய்மர் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


சர்ச்சைக் காட்சி


ஓப்பன்ஹெய்மர் படத்தில் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அவரது காதலிக்கும் இடையிலான படுக்கையறைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இருவரும் நெருக்கமாக இருக்கும் தருணத்தில் ஓப்பன்ஹெய்மரின் காதலி அவரிடம் பகவத் கீதையைக் கொடுத்து அதைப் படிக்கச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்.


அப்போது கீதையில் புகழ்பெற்ற வாசகம் மற்றும் தனது தாரக மந்திரமாக இருந்த “உலகை அழிக்கும் சக்தியான மரணமாக நான் இப்போது அவதரித்திருக்கிறேன்” எனும், மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் கூறிய வாசகத்தை ஓப்பன்ஹெய்மர் படிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தக் காட்சி இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகவும், இந்தக் காட்சிக்கு ஒப்புதல் அளித்து திரையரங்குகளில் வெளியிட அனுமதி வழங்கிய சென்சார் வாரியத்தையும் விமர்சித்து வருகிறார்கள் சில இணையவாசிகள். இந்நிலையில், விமர்சனங்களுக்குப் பிறகு இந்தக் காட்சியை அடுத்தடுத்தத் திரையிடல்களில் படத்தில் இருந்து நீக்குவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


 






 






முதல் நாள் வசூல்


இந்த எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓப்பன்ஹெய்மர் முதல் நாளில் உலகளவில் 29 மில்லியன் மற்றும் இந்தியாவில் மட்டும் 13.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.