நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் தங்கள் அழகான திருமண வாழ்க்கையில் இணைந்தனர். சென்னை அருகில் மகாபலிபுரத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷாரூக் கான், அஜித் முதலான பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், நயன்தாரா -  விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஹனிமூன் சுற்றுலா செல்லவில்லை எனக் கூறப்பட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஹனிமூன் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. 


திருமணம் முடிவடைந்த பிறகு, கடந்த ஜூன் 19 அன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் தாய்லாந்தில் இருப்பதைப் பதிவு செய்துள்ளார். இந்தப் படம் காரணமாக, அவரும் அவரது மனைவி நயன்தாராவும் தாய்லாந்து சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 


அதிக பணிகள் காரணமாக தம்பதியினர் தங்கள் ஹனிமூன் திட்டத்தை ஒத்தி வைத்திருந்ததாக முன்னர் கூறப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்திருந்த `ஓ2’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருந்தது. 



மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த `லூசிஃபர்’ திரைப்படம் தெலுங்கு மொழியில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் `காட்ஃபாதர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்துள்ளன. இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கானை வைத்து உருவாக்கும் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கிறார். 


இவை ஒருபக்கம் இருக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






நயன் தாரா பெயரிலான ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன.