பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள இதே நாளில் நடிகை த்ரிஷாவுக்கு, அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. 


மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் இன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா,நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






இதில் குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பலரும் அவரை இளைய பிராட்டி குந்தவையாகவே கொண்டாட தொடங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. மேலும் தமிழ் சினிமாவின் 50 வருட கனவான பொன்னியின் செல்வன் நாவல் படமாக ஆகியுள்ளதன் மூலம் த்ரிஷாவுக்கு இந்நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. 






இதுமட்டுமல்லாமல் 23 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா வாழ்க்கையில் இந்நாள் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது. அதாவது 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தான் த்ரிஷா மிஸ் சென்னை அழகிப்போட்டியில் முதலிடம் பெற்று அசத்தினார். ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான த்ரிஷா,லேசா லேசா படத்தின் மூலம் நடிகையாக ஜொலிக்க தொடங்கினர். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிலம்பரசன், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்றளவும் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.