வாழ்க்கையில் எது நடந்தாலும் நிதர்சனமான ஒன்றாக தான் பார்ப்பேன் என மறைந்த இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடங்கி, இணை இயக்குநர், இயக்குநர் என சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர் மாரிமுத்து. தொடர்ந்து நடிகராக ரசிகர்களிடத்தில் பரீட்சையமான அவர், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்த மாரிமுத்து, திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (செப்டம்பர் 8) உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படியான நிலையில் மாரிமுத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. 


அதில் ஒரு நேர்காணலில் பேசிய மாரிமுத்து, "நான் பிறந்தது தேனி மாவட்டம் வருசநாடு என்னும் கிராமத்தில் உள்ள பசுமலைத்தேரி 15 வீடுகள் கொண்ட குக்கிராமத்தில் தான் பிறந்தேன். நான் பிறக்கும்போது எங்கள் கிராமத்தில் மின்சாரம் கிடையாது. 15 கி.மீ.,க்கு பள்ளிக்கூடம் கிடையாது. பஸ் வருசநாடு வரை தான் செல்லும் அதன்பிறகு 4 கி.மீ, வயல், மேடு, குளம் உள்ளிட்டவற்றை கடந்து தான் செல்ல வேண்டும். வருசநாடு வந்து நான் பேப்பர் படிப்பேன். தமிழ்மொழி, எழுத்து மீது இருந்த பற்று தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளேன். நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது தான் கரண்ட் வந்துச்சுன்னா பாத்துகோங்க. எனக்கு படிப்பு மேல ஒரு பிடிப்பு இருந்துச்சு. அதில் உறுதியாக இருந்தேன்" என தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து நீங்கள் வாழ்க்கையில் கதறி அழுத தருணம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ‘இதுவரை நான் வாழ்க்கையில் அழுதது கிடையாது. எங்க அப்பா இறந்த அப்பகூட அழுகை வரல. என்னை எல்லாரும் கல்மனசுக்காரன் என சொல்வாங்க. இனிமேலும் எனக்கு அழுகுறதுக்கான வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல. எது நடந்தாலும் நிதர்சனமான ஒன்றாக தான் பார்ப்பேன். அப்பா இறந்துட்டாரு, அவருக்கு மூச்சு நின்னு போச்சு, அவரை எடுத்துக் கொண்டு போய் நெருப்புல வச்சி எரிக்கப்போறோம். சாம்பலா மேல புகையா போகப்போறாரு. எனக்கு அப்பா வாழ்ந்துட்டாரு, சாக வேண்டியது தானேன்னு தான் எனக்கு தோணுச்சு. ஆனால் உள்ளுக்குள்ளே கொஞ்சம் உதறல் இருந்துச்சு. எவ்வளவு பெரிய கஷ்டத்துலேயும் நான் அழுதது கிடையாது. அது இயற்கையாகவே எனக்கு அமைந்தது” என மாரிமுத்து தெரிவித்திருந்தார். 


தொடர்ந்து சினிமா விமர்சனம் பண்ணுபவர்கள், படைப்பை விமர்சனம் செய்யாமல் தனிமனித விமர்சனம் செய்கிறார்கள். அப்படி பண்ணாதீர்கள். தரமான விமர்சனத்தை பண்ண வேண்டும் என அட்வைஸ் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 




மேலும் படிக்க: Marimuthu: ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?.. வதந்திகளை பரப்பாதீர்கள் என பலரும் வேண்டுகோள்...!