நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ (The Hunt For Veerappan) தொடர் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஏன் காட்டின் ராஜா என்றழைக்கப்படுகிறார் என விவரிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன். இவர் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், பெயரை கேட்டாலே ஒருமுறை திகைத்து பார்க்கும் வண்ணம் சம்பவங்கள் செய்தவர். அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ (The Hunt For Veerappan) தொடர் வெளியாகியுள்ளது. 


இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, வீரப்பன் குழுவின் இருந்த ஆட்கள், , ஊர் மக்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரி என பலரும் வீரப்பன் பற்றி கூறும் கருத்துகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பியது. இதில் முதல் எபிசோடில் இடம் பெற்ற சில காட்சிகளை காணலாம். 


கே.எம்.கோவிந்தன் (வீரப்பன் குழுவில் இருந்த நபர்)


வீரப்பன் குழுவுக்கு காட்டில் எங்கு சந்தன மரம் இருக்கும் என தெரியும். அதனால் ஊருக்குள் இருந்து 100 முதல் 300 பேர் வரையிலான மக்களை அழைத்துச் செல்வார்கள். சந்தன மரம் லோடு ஏற்றி செல்லும் டிரைவரிடம் நான் சொல்வேன். அதாவது, ‘வழியில் போலீஸோ, வனத்துறை அதிகாரிகளோ கை காட்டினால் மெதுவாக செல், ஆனால் வண்டியை  எக்காரணம் கொண்டும் ஆஃப் பண்ணிராத. அதையும் மீறி ரோடு நடுவுல நின்னாங்கனா தூக்கிரு. அப்படியும் துரத்திட்டு வந்தாங்கன்னா துப்பாக்கி இருக்கு சுட்டுரு.’ என தெரிவிப்பேன்.  


வீரப்பன் நினைச்சிருந்தா வந்த பணத்துல லாரி, ஹெலிகாப்டர், பஸ்ன்னு வாங்கி சொத்துக்களை குவிச்சிருக்கலாம். ஆனால் மரம் கடத்த கடத்த அவர் பெயர் தான் உயர்ந்துச்சே தவிர, தாழ்ந்து போகல. அதனால் தான் அவரை ‘சந்தன கடத்தல் மன்னன்’.. ‘காட்டுராஜா’ன்னு அழைக்கிறாங்க. ஊர்க்காரங்களுக்கு வேலை செஞ்சு கொடுத்தா அவங்க ஏன் இந்த வேலைக்கு போகப்போறாங்கன்னு வீரப்பன் என்னிடம் சொல்லுவாரு. 






வீரப்பன் கல்யாணம் அன்னைக்கு இரு மாநில போலீஸூம் வந்து சந்தன கட்டையை எல்லாம் அள்ளிட்டு போய், லாரிக்கெல்லாம் தீ வச்சாங்க.  அன்னிக்கு, அவருக்கு ரொம்ப கோவம் வந்துட்டு. நான் உடனே வந்து எத்தனை பேரை கொல்றேன்னு பாருன்னு வந்தாரு. ஒரு போலீஸ் வாகனம் தாக்கப்பட்டு 4 பேர் இறந்தார்கள், 2 பேர் பலத்த காயம் அடைந்தார்கள்’ என கோவிந்தன் கூறியுள்ளார். 


அன்புராஜ் (வீரப்பன் குழு)


அப்ப நான் சின்ன பையன். எல்லா சாதி மக்களையும் உள்ளடக்கியது தான் வீரப்பனின் கூட்டம். அவ்வளவு ஆட்கள், சாப்பாடு என அந்த காடு ஒரு கிராமம் மாறி ஆயிடுச்சி. கோர்ட்டுல இருந்த வழக்கு எல்லாம் வாபஸ் வாங்கிட்டு வீரப்பன் கிட்ட தீர்வு காண வருவாங்க. இந்த காட்டை நம்பி வாழ்றவங்க, மலையில் இருக்குறவங்க வீரப்பனை ‘வனதேவதை’ ஆக தான் பார்ப்பாங்க. வந்து வந்து ஆண், பெண் பேதமில்லாம கையை பிடிச்சி முத்தம் கொடுப்பாங்க. 


மேலும் படிக்க: Jailer Opening Day Collection: 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா': காலியாகும் டிக்கெட்டுகள்.. கலெக்‌ஷனை அள்ள தயாராகும் ஜெயிலர்..!