மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா மலையாளத்தில் பல படங்களில் நடித்தார். தமிழில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்  ‘நேரம்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து ராஜாராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும் என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில்தான் அவர் தனது காதலரான ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.


 






திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, அவ்வப்போது ஒரு சில மலையாள படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது நானியுடன் இணைந்து  “ அடடே சுந்தரா” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில்,  நீங்கள் ஒரு இஸ்லாமிய பெண். படத்தில்   ஒரு இந்து இளைஞர் ஒருவரின் மனைவியாக லீலா தாமஸ் என்ற கிறிஸ்துவ பெண்ணாக நடித்துள்ளீர்களே.. கதையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. 


 



அப்போது பதிலளித்த நஸ்ரியா, “ விவேக் இந்த கதையை சொன்ன போது எனக்கு பிடித்தது. லீலா தாமஸ் வேடத்தில் நான் எதையும் பெரிதாக செய்யவில்லை. லீலா தாமஸ் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு அதற்கு தேவையானதையும், இயக்குநர் விரும்பியதையுமே செய்து கொடுத்துள்ளேன்.” என்று பதில் அளித்துள்ளார். இந்தப்படம் ஜூன் மாதம் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியாக  உள்ளது. இந்தப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.