மும்பையில் நடிகர் ஷாருக்கானுடன் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக நயன்தாரா சென்றிருந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களுடன் நயன்தாராவின் பாதுகாவலர்கள் கரடுமுரடாக நடந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


திருமணம், ஹனிமூன் பரபரப்பு முடிந்து சூட்டிங்குக்கு கிளம்பிய உடனேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.






திருமணம் முதல் தினம் தினம் அப்டேட்ஸ்:


தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் அண்மையில் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.  முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுத்ததால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது. 


திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின் மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருப்பதி சம்பவம் குறித்து விளக்கம் தெரிவித்து விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்.


திருமணம் முடிவடைந்த பிறகு, கடந்த ஜூன் 19 அன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் தாய்லாந்தில் இருப்பதைப் பதிவு செய்தார். இந்தப் படம் காரணமாக, அவரும் அவரது மனைவி நயன்தாராவும் தாய்லாந்து சென்றிருக்கலாம் என யூகிக்கப்பட்டது. இந்த படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தான் மும்பை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


நயன், விக்கி ப்ளான் என்ன?


மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த `லூசிஃபர்’ திரைப்படம் தெலுங்கு மொழியில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் `காட்ஃபாதர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்துள்ளன. இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கானை வைத்து உருவாக்கும் திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கிறார். 
இவை ஒருபக்கம் இருக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.