தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ’ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ என்ற சிறப்பு நடவடிக்கையை சென்ற ஆண்டு முதல் தமிழ்நாடு காவல்துறை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.


ஐந்தரை கோடி சொத்து முடக்கம்


இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் 5.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் அசையா சொத்துகளை தென் மண்டல ஐ ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான காவல் துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ’ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ திட்டத்தின்படி கடந்த மார்ச் மாதம்,  300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 350 பேர் கைது செய்யப்பட்டு, 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


குண்டர் சட்டம் பாயும்


மேலும், இதுதொடர்பாக, அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு முன்னதாக சுற்றறிக்கை அனுப்பினார்.


அதில், ”கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


போதைப்பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.


பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு


இந்த பணிகளை சட்டம் ஒழுங்குகூடுதல் டிஜிபி தினமும் கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். அதேபோல், சென்னை,ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக இந்தப் பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்ப வேண்டும்” என்றும் இதுகுறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கஞ்சா தொடர்பான கொலை, கொள்ளை, உயிரிழப்புகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் கஞ்சா தலைநகராக சென்னை மாறிவிட்டது என்றும், ஒட்டுமொத்த இளைஞர்களையே அழித்து வரும் இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திணறி வருவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.