கொரோனா தொற்றின் காரணமாக நிச்சயம் திரையரங்கில் நெற்றிக்கண் வருவதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது தொடர்வாக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எப்பொழுது இத்திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு பின்னர் நெற்றிக்கண் படம் மூலம் மீண்டும் நயன் தாரா ஓடிடி பக்கம் செல்கிறார்.


தமிழ்சினிமாவில் கதாநாயகன்களுக்கு இணையாக நடிப்பில் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த கதாநாயகிகள் என்றால் நினைவுக்கு வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் என்றும் நடிகை நயன்தாராவை கூறலாம். அந்த வரிசையில் மற்றொரு புதுமையான கதாபாத்திரத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வந்த திரைப்படம் தான் நெற்றிக்கண். ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரவிருக்கும் இப்படத்தினை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன்,  ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.




கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கிலிருந்து தமிழக அரசு தளர்வுகள் அளிக்கப்பட்ட  பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீதிக் காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இதனையடுத்து, தான் நடித்த இப்படத்தின் இறுதி வடிவத்தைப்பார்த்த நயன்தாரா, இப்படம் மிகவும் பிடித்துள்ளது என இப்படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவை பாராட்டியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.


கொரியன் படத்தின் ரீமேக்காக  தமிழில் நெற்றிக்கண்ணாக வரவிருக்கும் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தில் ஒரு விபத்தில் கண்பார்வை இழக்கவே அவர் செய்துவந்த வேலையினை இழக்க நேரிடுகிறது. இந்நிலையில்தான் அப்பகுதியில் சைக்கோ கடத்தல்காரனால் மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. யாராலும் சைக்கோ யார் என்று கண்டுபிடிக்காத நிலையில், கண்பார்வை இழந்த நாயகி இதனை எ்ப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதைக்களம்.  இந்த கதையினை மையமாக வைத்துத்தான் தமிழில் நெற்றிக்கண் படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.


ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களுக்காக நடக்கும் பேரத்தைக் கணக்கில்கொண்டு, நயன்தாரா நெற்றிக்கண்ணுக்கு வாங்கிய சம்பளத் தொகையை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி அறிவிக்கப்பட்டாலும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.