நடிகை நயன்தாரா இன்று 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் பிறந்து சினிமாத்துறையில் 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார் நயன்தாரா. கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது பார்ட் டைம்மாக மாடலிங்கிலும் கவனம் செலுத்திக்கொண்ருந்த நயன்தாராவை பார்த்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு தனது 'மனசினகாரே' படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற, நயன் தாராவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த நயன்தாரா 2005 ஆம் ஆண்டு வெளியான  ‘ஐயா’ படத்தில் நடித்தார்.






 


தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டாக, அடுத்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் ஜோடி சேர்ந்தார். அந்தப் படமும் எகிடுதகிடு ஹிட்டாக, ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி, கள்வனின் காதலி, ஈ, வல்லவன் என அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று விமரிசையாக கொண்டாடினார். கேக் வெட்டி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனை அன்பாக கட்டி அணைத்து அன்பை பறிமாறும் நயன், பின்பு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள், சினிமாத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







பிறந்தநாள்  விழாவில் நடிகை சமந்தாவும் கலந்துகொண்டார். நயனும், சமந்தாவும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.