தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தின் முதல்நாள் வசூல் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. 



துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப்படத்தின் நாயகியாக இந்துஜா நடித்திருந்தார். படம் கடந்த 29 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


 






படத்தை பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இராண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கூறினர். மேலும் தனுஷின் நடிப்பு மற்றும் யுவன்ஷங்கர்ராஜாவின் இசை சிறப்பாக இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்தனர்.


இந்த நிலையில் இந்தப்படத்தின் முதல்நாள் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகியுள்ளன. அந்தத்தகவல்களின் படி வெளியான முதல் நாளன்று   ‘நானே வருவேன்’ திரைப்படம்  10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 





முன்னதாக பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து பேசியிருக்கும் அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக ‘நானே வருவேன்’ படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த வித கருத்துவேறுபாடு இல்லை.




உதாரணத்துக்கு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நானும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிஇஓ தமிழ்குமரனும் பேசும் போது, இரண்டு பேரும் ஒரே மாதத்தில்தான் வருகிறோம் என்றேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்? .. அதற்கு  பதிலளித்த நான்  ‘அசுரன்’ படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதே போல இதிலும் அந்த 9 நாட்களை நான் விடமாட்டேன் என்று சொன்னேன்." என்று பேசினார். 


நன்றி: Behindwoods