பக்தி படங்களே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செய்து வந்த காலகட்டத்தில் அறிமுகமான மூத்த கலைஞர் என்.எஸ். கிருஷ்ணன். அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற ஸ்டார் நடிகர்கள் கூட செய்யாத புரட்சியை செய்த முன்னோடி கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் 114 வது பிறந்தநாள் இன்று. மகா கலைஞனின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் ஒரு பதிவு.


 



சமுதாய சீர்திருத்தவாதி :


சிறுவயது முதலே நாடகங்கள், பல புராண காவியங்கள், விடுதலை போராட்ட கதைகளில் வேஷம் கட்டியவர். சினிமா துறையில் நுழைவதற்கு முன்னரே சமூக சீர்திருத்தங்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, தீண்டாமை, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மதுவிலக்கு என சமுதாயம்  சார்ந்த பிரச்சனைகளை மிகவும் துணிச்சலாக வெகுஜன மக்களுக்கு புரியும் வகையில் படங்களின் மூலம் புரட்சி செய்த மாமனிதர்.







நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி :


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் ஆனால் அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவை நடிகர்கள் என்றாலே திரையில் அவ்வப்போது தோன்றி சிரிக்க வைப்பவர்கள் மட்டுமின்றி சிந்திக்கவும் வைப்பவர்கள் என்பதை உணர்த்தியவர். நகைச்சுவை மூலம் மக்களை சீர்படுத்தும் யுக்தியை கையாண்டவர். நகைச்சுவைக்கென தனி ட்ராக் உருவாக்கியதும் அவரே. அநீதிக்கு எதிராக ஹீரோக்கள் மட்டுமே குரல் கொடுப்பார்கள் என்ற நிலையை மாற்றியமைத்து நகைச்சுவை கலந்து சீர்திருத்த கருத்துக்களை மக்களுக்கு அறிவுரைபோல் இல்லாமல் இயல்பாக  கொண்டு சேர்த்து அதை ஆழ்மனதில் பதியவைப்பது என்.எஸ்.கேவின் தனி சிறப்பு. நாற்பத்தி ஒன்பது ஆண்டுகால திரைவாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது முற்போக்கு சிந்தனைகள் மூலம்  ஆட்கொண்டவர்.     


தொலைநோக்கு சிந்தனையாளர் :


நகைச்சுவை கலைஞர்களின் முன்னோடியான என்.எஸ்.கே ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுத்த வள்ளல். பக்தி படமாக இருந்தாலும், சமூக சார்ந்த படங்களில் நடித்தாலும் தனது முற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்த தவறாத தொலைநோக்கு சிந்தனையாளர். சினிமா துறையில் மட்டுமின்றி அரசியல் பிரச்சாரங்களில் என்.எஸ்.கேவின் பேச்சு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும். நகைச்சுவை உணர்வோடு தன்னை அறியாமலேயே பலருக்கும் பாடம் புகட்டிய ஆசான்.


கலைவாணரின் வள்ளல் தன்மை தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொண்டாராம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை அவரே பட இடங்களில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்.எஸ்.கே போன்ற அபூர்வமான மனிதர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனது நாற்பத்தி ஒன்பதாம் வயதிலேயே  சிந்திப்பதையும் செயல்படுவதையும் நிறுத்திக்கொண்டார். அவரின் மறைவுக்கு பிறகும் அவரின் திரைப்படங்கள் வாயிலாகவும் வசனங்கள், பாடல்கள் மூலமாகவும் அவரின் கருத்துக்கள் இன்றளவும் பரப்பப்பட்டு  வருகின்றன என்றால் அது மிகையல்ல.