டிவி நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர்கள் வித்யாசாகர் - டி.இமான் பங்கேற்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர்  இயக்கிய சீதா என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் வித்யாசாகர். பெயருக்கு ஏற்றதுபோல வித்தியாசமான இசையால் ரசிகர்களை கவர்ந்தார். 1995 ஆம் ஆண்டு அர்ஜூன் இயக்கி நடித்த கர்ணா படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் இடம்பெற்ற மலரே மௌனமா என்ற பாடல் காலத்தால் அழியாத காதல் கீதமாக மாறியது. இப்பாடலை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இது ஒரு குறிஞ்சி பூ என வர்ணித்து பாராட்டினார். 


இதனைத் தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், மாதவன், விஜயகாந்த், விஷால், பரத் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 1995 ஆம் ஆண்டு தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரை இசையுலகில் வித்யாசாகர் சாம்ராஜ்யம் தான் இருந்தது என்று சொல்லலாம். மெலடி பாடல்கள் ஆனாலும் சரி, குத்து பாடல்கள் என்றாலும் வித்யாசாகர் சிறப்பாக இசையமைப்பார். 


இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் வித்யாசாகர் தேசிங்கு ராஜா 2, உயிர் தமிழுக்கு, டபுள் டக்கர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  அதேசமயம் தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகளையும் பங்கேற்று வருகிறார்ட். இதனிடையே அவர் வசந்த் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்து வருகிறார். அப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் வித்யாசாகருடன் இசையமைப்பாளர் இமானும் பங்கேற்கிறார். 






அப்போது இமான் அவரிடம், ‘ஒரு சில இசையமைப்பாளர்கள் தான், அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இன்றைக்கும் ஹார்மோனியம் வச்சு இசையமைக்கிறார்கள் என கேள்வி கேட்கிறார். அந்த கேள்வி கேட்டு முடிவதற்குள், ‘நீ எப்படி இசையமைப்ப?’ என திரும்ப வித்யாசாகர் இமானிடம் கேட்கிறார். அதற்கு நான் கீபோர்ட் வச்சி தான் இசையமைப்பேன் என தெரிவிக்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. 


இந்நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.