போர் மற்றும் மோதலுக்கு எதிராக வலுவான செய்தியை வழங்க உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய பாப் இசைக் கலைஞரான உஷா உதுப் கூறியுள்ளார். 


கொல்கத்தாவில் நடந்து வரும் அபீஜய் கொல்கத்தா இலக்கிய விழாவில் பேசிய 75 வயதான பாடகி உஷா உதுப், ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் கிழக்கு ஐரோப்பாவில் போருக்கு முன்பு தான் நிகழ்த்திய கான்சர்ட் ஒன்றில் தனது 'டார்லிங், ஆன்கோன் சே ஆன்கெய்ன் சார் கர்னே தோ' பாடலை ரசித்து மகிழ்ந்ததை நினைவு கூர்ந்த அவர் இவ்வாறு கூறினார். 


‘7 கூன் மாஃப்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது இந்தப் பாடல் ரஷ்ய மார்ச்சிங் பேண்ட் இசைக்குழுவான ‘கலிங்கா’ பாடல் போலவே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரேனியப் போர் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இசைக்கலைஞர்கள் இருநாடுகளுக்கு இடையே அமைதியின் தூதுவர்களாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.






“உலகின் அனைத்து இசைக்கலைஞர்களும் ஒன்றுபட்டு, போர் மற்றும் மோதலுக்கு எதிராகவும் அமைதிக்காகவும் ஏதாவது செயல்பட வேண்டும். நாம் இந்த உலகத்தின் பிரஜைகள் ”என்று அமைதியை வலியுறுத்தி அவர் பேசினார்.


1969 இல், பார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள டிரின்காஸ் உணவகத்தில் பாடகியாக இருந்த தனது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த அவர், “அப்போது கொல்கத்தா பெரிய அழகான இரவு விடுதிகளின் நகரமாக இருந்தது. அங்கே உணவு விடுதியில் பாட இருந்த நான் புடவை அணிந்திருந்தேன். என்னை பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவதை உணர முடிந்தது. அவர்களுக்குள், ‘இந்த அம்மா இங்கே என்ன செய்யப் போகிறார்?’ என பேசிக்கொண்டனர். அவர்கள் என் புடவையை வைத்து என்னைப் பற்றி முடிவு செய்துகொண்டிருந்தார்கள்.  ஆனால் நான் பாடத் தொடங்கியவுடன் அவர்கள் ஸ்தம்பித்தனர். என்னை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்” என்கிறார். 


உஷா உதுப் தென்னிந்திய இசைப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அறியப்பட்ட முகம் என்பது குறிப்பிடத்தக்கது