பிரபல பின்னணி பாடகர் பங்கஸ் உதாஸ் தனது 72 வயதில் மும்பையில் இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பங்கஜ் உதாஸ் மறைந்ததாக அவரது குடும்பத்தினர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து அவரது குடும்பத்தார் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது : " பத்மஸ்ரீ பங்கஜ் உதாஸ் நீண்டகால நோய்வாய் பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி (இன்று) காலமானார். உதாஸ் குடும்பத்தினர் மிகவும் கனத்த இதயத்துடன் துயரத்துடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர். 






கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாடகர் இன்று மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.


யார் இந்த பங்கஜ் உதாஸ்..?


ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த பங்கஜ் உதாஸ், கடந்த 1951 மே 17 அன்று குஜராத் மாநிலம் ஜெட்பூரில் பிறந்தார். இவரது குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் இவர்தான் இளையவர். இவருடைய குடும்பம் ராஜ்கோட் அருகே உள்ள சர்க்காடி என்ற ஊரைச் சேர்ந்தது. அவரது தாத்தாவும் பாவ்நகர் மாநிலத்தின் ஜமீன்தார் மற்றும் திவானாக இருந்தார். அவரது தந்தை கேசுபாய் உதாஸ் ஒரு அரசு ஊழியர் மற்றும் இவரது தாயார் ஜிதுபென் உதாஸ் பாடல்களை மிகவும் விரும்பி பாடுவார் என்று கூறப்படுகிறது. பங்கஜ் உதாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இசையில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. 


பாடகராக மாறியது எப்படி..? 


பங்கஜ் சிறு வயதில் பாடகராக வருவார் என்று யாரும் நினைக்கவில்லை. அந்த நாட்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் 'இ மேரே வதன் கே லோகன்' பாடல் வெளியிடப்பட்டது. பங்கஜ்ஜிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்து போகவே, இந்தப் பாடலை எந்த உதவியும் இன்றி அதே தாளத்தோடு இசையமைத்து பாடியுள்ளார். ஒரு நாள் பள்ளி முதல்வர் அவர் பாடகர் குழுவில் இருப்பதைக் கண்டு, பள்ளியின் பிரார்த்தனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஒரு கலாசார நிகழ்ச்சியின்போது பங்கஜ்ஜின் பள்ளி ஆசிரியர் வந்து ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் பாடும்படி கேட்டுக் கொண்டார்.


பங்கஜ் ஜி 'ஏ மேரே வதன் கே லோகன்' பாடலைப் பாடினார். அவரது பாடல் அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது. பார்வையாளர்கள் கரவொலி எழுப்பியபோது, ​​பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு 51 ரூபாயை வெகுமதியாக வழங்கினார்.


சங்கீத் அகாடமியில் இசை பயின்ற பங்கஜ்:


 பங்கஜ் உதாஸ் தனது சகோதரர்களைப் போலவே இசைத் துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் கருதினர். அதன் பிறகு பெற்றோர்கள் பங்கஜை ராஜ்கோட்டில் உள்ள மியூசிக் அகாடமியில் சேர்த்தனர். பங்கஜின் சகோதரர்கள் மன்ஹர் மற்றும் நிர்மல் உதாஸ் இருவரும் இசையில் நன்கு அறியப்பட்ட பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே இவரது இசை பயணம் தொடர்ந்தது.