800 OTT Release: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட 800 படம் டிசம்பரில் ஓடிடியில் வெளியாக உள்ளது. 

 

வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீபதி கனிமொழி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவரது இரண்டாவது படமாக இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை 800 என்ற பெயரில் எடுத்தார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

 

இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சாளர். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் பயணத்தில் ஏற்ற, இறங்கள் அதிகமாகவே இருந்தன. இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வேலையில் ஸ்ரீபதி இறங்கினார். 800 என பெயரிடப்பட்ட படம் கடந்த அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

 

படத்தின் பெரும்பாலான பகுதி இலங்கையில் எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த பெரும்பாலான குடும்பங்களில் முத்தையாவின் குடும்பமும் ஒன்று. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் செலுத்தி வந்த முத்தையா, பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரராக உயர்ந்து நின்றார். உயரத்தை எட்ட அவர் பட்ட சிக்கல்களை கூறும் விதமாக ஸ்ரீபதி 800 படத்தை அழகாக காட்சியமைத்துள்ளார். 

 

முன்னதாக இந்தப் படத்தின் பேச்சு எழுந்தபோது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது. அதற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், இலங்கை கிரிக்கெட் வீரரின் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சையாகி, படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு தான், முதன் முதலில் இந்தியாவுக்கு இரு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த மதுர் மிட்டல் 800 படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். 

 

முத்தையாவின் நிஜ வாழ்க்கையில் சர்ச்சைகள் இருந்தது போலவே அவரது படம் ரிலீசாவதிலும் சிக்கல்கள் இருந்தன. எனினும், வெற்றிகரமாக திரையரங்குளில் ரிலீசான 800 படம், திரைபிரபலங்கள், ரசிகர்கள் என அவரது அப்லாஸ்களை பெற்றது. ஆனால் வணிகரீதியாக இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்ட இந்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. வரும் டிசம்பர் 2ம் தேதி ஜியோ சினிமாவில் 800 படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.