என்ன தான் தமிழ் சினிமாவில் ரொமான்ஸ், அதிரடி, ஆக்ஷன், திரில்லர், சென்டிமென்ட் படங்கள் வெளியானாலும் பக்தி படங்களை விரும்பும் ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது. அதையே கொஞ்சம் பேன்டஸியாக கொடுக்கும் போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது கவர்கிறது. அப்படி 2020ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த படம் தான் 'மூக்குத்தி அம்மன்'. டைட்டில் கேரக்டரில் நடிகை நயன்தாரா நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கொரோனா காலகட்டம் என்பதால் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.


 



 


நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பு, ஆர்ஜே பாலாஜியின் டைமிங் காமெடி, ஸ்வாரஸ்யமான திரைக்கதை என படத்துக்கு ஏராளமான பிளஸ் பாய்ண்ட் படத்தின் வெற்றியை உறுதி செய்தன. காமெடி கலந்த சாமி படம் என்றாலும் சமூக அக்கறையுடன் போலி சாமியார்களை தோலுரித்து காட்டும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது ரசிகர்களின் கவனம் பெற்றது. ஊர்வசி, மௌலி, அபி நட்சத்திரா, அஜய் கோஷ், மனோ பாலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'மூக்குத்தி அம்மன் 2 ' குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அது தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. அதனால் மக்கள் பல வகையிலும் யூகிக்க துவங்கினர். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜியே இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்தால் நன்றாக இருக்குமே என கருத்தும் தெரிவித்து வந்தனர். 


 




ஆனால் தற்போது அந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அரண்மனை போன்ற சீக்வேல் படங்களை மிகவும் வெற்றிகரமாக இயக்கி வரும் இயக்குநர் சுந்தர்.சி தான் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி ஸ்டைல் வேறு ஒரு வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் என்பதால் இது புதுமையான மூக்குத்தி அம்மனாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த தகவல் அறிந்து உற்சாகம் அடைந்துள்ளனர். இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.