சூப்பர் ஹீரோ தொடரான சக்திமானை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இயக்குவது குறித்து பிரபல இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சூப்பர் ஹீரோ என்றவுடன் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வருவது சக்திமான் தான். கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 13  முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி எனப்படும் சக்திமான் கேரக்டரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். மேலும் வைஷ்ணவி, கிடு கித்வானி, டாம் ஆல்டர், ஷிகா ஸ்வரூப், கஞ்சேந்திர சௌஹான் ஆகியோரும் இந்த தொடரில் நடித்திருந்தனர். 






சக்திமான் காப்பாற்றுவார் என சொல்லி பல குழந்தைகள் விபரீத செயல்களில் ஈடுபட்டது என பல விமர்சனங்களை சந்தித்தாலும் கொரோனா ஊரடங்கின் போது சக்திமான் தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து முகேஷ் கன்னாவுடன் இணைந்து சோனி நிறுவனம் சக்திமான் தொடரை படமாக எடுக்க முடிவு செய்தது. 3 பாகங்களாக எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒன்று நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. 


கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சோனி நிறுவனம் வெளியிட்ட டைட்டில் டீசரில் ஹீரோ சக்திமானுக்குக்கான பிரத்யேக ஆடை வடிவமைக்கப்பட்டது காட்டப்பட்டு மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிலவுவதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது என குறிப்பிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சக்திமான் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிப்பார் என சொல்லப்பட்டுள்ளது. 






இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமான மின்னல் முரளியை இயக்கிய பாசில் ஜோசப்பிடம் சக்திமான் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.