பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 






இந்த முறை பிக்பாஸ் வீடு  கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. ஆனால் நேற்றைய தினம் இணையத்தில் வெளியான வீடியோவில் முதல் போட்டியாளராக இந்நிகழ்ச்சிக்கு வந்த ஜி.பி.முத்து தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வார இறுதியில் கமல்ஹாசன் பங்குபெறும் எபிசோட் ஒளிபரப்பானது. 


அதன் தொடக்கத்தில் ஜி.பி.முத்துவிடம் பிக்பாஸ் பேசினார். ஆனால் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் எபிசோடின் கடைசியில் கமல் நேரடியாகவே ஜி.பி.முத்துவிடம் பேசினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வாய்ப்பு பற்றி எல்லாம் எடுத்துச் சொல்லி அவரை போட்டியில் இருக்க வைக்க முயன்றார். ஆனால் தனக்கு பணம், புகழை விட தன் மகன்தான் முக்கியம் என்றும், அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் தேடுவான். நான் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் இருந்தது இல்ல. அதனால நான் போயே ஆகணும் என உறுதியாக சொன்னார். 






உடனே ஜி.பி.முத்துவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வெளியே செல்ல அனுமதிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இதனை சக போட்டியாளர்களிடம் கமல் சொன்ன போது முதலில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பணத்தை விட பாசம் தான் பெரிது என ஜி.பி.முத்து சொன்னதாக கமல் சொல்ல அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஜி.பி.முத்து  செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 






மேலும் அவரது மகன் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் புகைப்படமும் ட்ரெண்டாகியுள்ளது. அது குறித்து உறுதியான விவரங்கள் வெளியாகாத நிலையில் அனைவரும் ஜி.பி.முத்துவின் பாசத்தை பாராட்டியதோடு, அவரது மகன் விஷ்ணு மீண்டும் உடல்நிலை சரியாகி வரவேண்டும் எனவும் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நல்ல ஆக்டிவ் ஆக இருந்த ஜிபி முத்து இந்த வாரம் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை என்றும், வீட்டில் இருப்பவர்களை தேடுவதாகவும் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். உடனே பிக்பாஸ் தரப்பில் வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் நீங்கள் நன்றாக விளையாட வேண்டும் என கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.