மெய்யழகன்


பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி , அரவிந்த் ஸ்வாமி நடித்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான படம் மெய்யழகன். தேவதர்ஷினி , ஜெயபிரகாஷ் , ராஜ்கிரண் , ஶ்ரீதிவ்யா , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். 


உறவுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளால், தான் வாழ்ந்த வீட்டை விற்று தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறபட்டு செல்கிறார் அருள்மொழிவர்மன் (அரவிந்த்சுவாமி). வருடங்கள் கழித்து தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சொந்த ஊரை விட்டு பிரிந்த ஏக்கம் மனதில் இருந்தாலும், உறவுக்காரர்கள் மீது ஏற்பட்ட கசப்பால், விருப்பமில்லாமல் கிளம்பிச் செல்கிறார் அருள்.


கல்யாணத்திற்கு சென்று தலையை காட்டிவிட்டு இரவே பஸ் பிடித்து சென்னைக்கு திரும்பி வருவதுதான் திட்டம். ஆனால் ஊரில் அவரை மிக ஆவலாக ஒருவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 


எடுத்த எடுப்பிலேயே அருளுடன் சகஜமாக பேசி அத்தான்.. அத்தான்.. என அருளை சுற்றிச்சுற்றி வருகிறார் கார்த்தி . ஆனால் அருளுக்கு கார்த்தியை சுத்தமாக நினைவில் இல்லை. இதை எப்படி கேட்பது என தயக்கப்பட்டு சரி ஊருக்குப்போகும் வரை தெரிந்தமாதிரியே காட்டிக்கொண்டு சமாளித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைக்கிறார் அருள்.


தஞ்சாவூரின் தொன்மையான இடங்கள் , ஆறுகள் , இருள் கவிழ்ந்த சாலைகளின் வழியே ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக நீள்கிறது மெய்யழகன் படத்தின் கதை.


மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு 






மெய்யழகன் படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்களில் பெரும்பாலானவர்கள் படத்தின் நீளத்தை ஒரு குறையாக கூறியிருந்தார்கள். இரண்டாம் பாதியில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி இடையில் நடக்கும் உரையாடல்கள் கதையை விட்டு விலகி செல்வதாகவும் 3 மணி நேரம் நீளம் இருப்பதால் பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதாக பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதனால் திரையரங்கில் மக்களின் ரியாக்‌ஷனைப் பார்த்து படத்தின் நீளம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்படி தற்போது படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.