தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் திரையுலகத்தினர் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நல்ல குணம் படைத்த மனிதர் :


1984ம் ஆண்டு வெளியான 'தாவணி கனவுகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. சிறிய வேடங்களில் நடித்தாலும் மிகவும் நிறைவாக நடிக்க கூடிய இவர் கமல், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். விவேக், வடிவேலுவுடன்  கூட்டணி காம்போக்களிலும் பட்டையை கிளப்பியவர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்து காட்டியவர். மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் நடிகர் மயில்சாமி. மேலும் தேவை என கேட்போருக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் மயில்சாமி திகழ்ந்து வந்தார். 


 



மாரடைப்பால் உயிரிழந்தார் :


மகா சிவராத்திரி தினத்தன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு முடித்துக்கொண்டு வீடு திரும்பியவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  


கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் :


நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நேரில் வர இயலாதவர்கள் சோசியல் மீடியா மூலம் தங்களின் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். 


இறப்பு குறித்து பதிவு செய்த மயில்சாமி :
 
நடிகர் மயில்சாமியின் இறப்பால் அதிர்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவர் பட நிகழ்ச்சி ஒன்றில் தனது இறப்பு குறித்து பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. " அதிக நாட்கள் நான் உயிருடன் இருக்க வேண்டும் என ஆசைப்படவில்லை. ஆனால் நான் இருக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அது தான் என்னுடைய ஆசை" என அவர் மேடையில் பேசியிருந்தார். 


உறவை கொண்டாடும் மனிதன் :


விவேக், சத்யராஜ், சரத்குமார், பி. வாசு என அனைவரிடமும் மிகவும் நெருங்கி சுமுகமாக பழகும் நடிகர் மயில்சாமி, யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக அவர்களிடம் பேசுவார். அதே போல இவருக்கு ஏதாவது உதவி என்றாலும் அவர்கள் ஓடி வருவார்கள். அந்த அளவிற்கு அனைவருடன் சுமுகமான உறவை தக்கவைத்து கொண்டவர்.