அறிமுகமான முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள் இன்று. 


தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 



தனுஷ் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான 'மயக்கம் என்ன' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் வெயிட்டேஜ் அதிகம் கொண்ட கேரக்டரில் வெகு சிறப்பாக யாமினியாகவே வாழ்ந்த ரிச்சா கங்கோபாத்யாயை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். அவரின் நடிப்பு விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேரக்டர்களில் ஒன்று யாமினி கதாபாத்திரம். 


அதை தொடர்ந்து நடிகர் சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் கச்சிதமாக அளவோடு நடித்திருந்தார் ரிச்சா கங்கோபாத்யாய். அடுத்த படமும் வெற்றிப்படமாக அமைந்ததால் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அவரின் திறமைக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அத்தோடு சினிமாவில் இருந்து விலகி கொண்டார் ரிச்சா கங்கோபாத்யாய். 



தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜோ என்ற வெளிநாட்டவரை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் அவ்வப்போது தன்னுடைய போட்டோ போஸ்ட் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில்  இருந்தார்.  


ரிச்சா கங்கோபாத்யாய் தனது கர்ப்ப கால புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்தார். ரிச்சா கங்கோபாத்யாய் - ஜோ தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு லூகா ஷான் லாங்கெல்லா என பெயரிட்டனர். 


திரைத்துறையில் இருந்து விலகி இருந்தாலும் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அவரின் கணவர் மட்டும் ரிச்சா இருவருமே 'மயக்கம் என்ன' படத்தின் கார்த்திக் யாமினியாகவே வாழ்ந்து வருகிறோம் என ட்விட்டர் மூலம் 'மயக்கம் என்ன' படத்தில் நினைவலைகளை எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்து இருந்தார்.