வாழை 


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வாழை .குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.


ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வாழை முதல் பாடல் கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியானது. 


வாழை செகண்ட் சிங்கிள்






முதல் பாடலான ‘தென்கிழக்கு தேன்சிட்டு‘ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வாழை படத்தின் இரண்டாம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு ஊருல ராஜா என்கிற இப்பாடலை இயக்குநர் மாரி செல்வராஜே எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளார்.  


வாழை படம் குறித்து மாரி செல்வராஜ்


வாழை படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படி கூறியுள்ளார்.  “சினிமாவுக்கு வந்ததும் நான் எடுக்க வேண்டும் என்று நினைத்த படம் வாழை. ஒரு 50 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன். இதை எடுத்தால்தான் என்னுடைய அடுத்த கதைக்கு என்னால் போக முடியும் என்று நான் நம்பிக்கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கதை இது. அதற்கு பிறகு நிறைய வாசிக்கத் தொடங்கியபோது தான் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுக்கக்கூடாது இதை நல்லா எடுக்கணும் என்று தள்ளி வைத்து பரியேறும் பெருமாள் எடுத்தேன். 
மாரி செல்வராஜ் மீது நிறைய சந்தேகங்கள் நிறைய விமர்சனங்கள் இருக்கலாம் . வாழைத் திரைப்படம் என்னை நம்புபவர்களுக்கு இன்னும் நன்றாக புரிந்துகொள்ளவும் என்னை சந்தேகிப்பவர்களுக்கு என் பக்கம் தங்கள் பார்வையை திருப்பவும் உதவியாக இருக்கும்” என்றார்