இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் நடத்திய மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பறை இசைக்கருவிகள், 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்,100க்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மக்களிடையே அமோகமான வரவேற்பை பெற்றது. 


 



ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு இடையிடையே பாரம்பரிய இசையில் பாடல்கள் பாடப்பட்டது அங்கு கூடியிருந்த மக்களை உற்சாகப்படுத்தியது; நமது பாரம்பரிய இசையையும் அழிந்து வரும் கலையையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பா.ரஞ்சித்தின் இந்த முயற்சி பாராட்டுகள் குவிந்தன. 


மூன்று நாட்களின் ஷெட்யூல் :


இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை 2022 நிகழ்ச்சி நாளை முதல் துவங்கவுள்ளது. டிசம்பர் 28ம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சி சென்னையில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் பறையிசை மேள தாளங்களுடன்  தொடங்கவுள்ளது; 


முதல் நாளான நாளை நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றன. இரண்டாம் நாளான 29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும்  ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமான  கானா பாடல்கள்  இடம்பெற உள்ளது. மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான  30 ஆம் தேதி  நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள்,விடுதலைக்கான எழுச்சிமிகு  பாடல்கள் மேடையேற்றப் படுகின்றது.


திரை பிரபலங்கள்  மற்றும்  அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்களிசையை மக்களோடு கொண்டாட தயாராக இருக்கிறார்கள். எளிய மக்களின் பண்பாடு, வாழ்வாதாரம், போராட்டம், கலாச்சாரம் ஆகியவற்றை பாடல்கள் மூலம் சாதியில்லாத ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒரு முன்னெடுப்பாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


 






 


அனுமதி இலவசம் :


மூன்று நாட்களாக நடக்கவிருக்கும் மார்கழியில் மக்களிசை 2022 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் "கட்டணமில்லா" முன்பதிவை பெற்றுக்கொள்ளலாம்.