பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 


காதலி கொலை


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தார். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து தான் புறப்படுவதாக கௌதமிடம், ரச்சனா கூறினார்.


இதற்கு கௌதம் தன்னுடம் இரவு தங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.


தங்க மறுத்ததால் ஆத்திரம் 



அடுத்த நாள் காலை, ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய வந்தபோது, அந்த பெண்ணின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி  அடைந்தனர்.  பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியான கௌதமை போலீசார் கைது செய்தனர். பின்பு, ” நானும் ரச்சனாவும்  கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாகவும், ரச்சனா தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்ததால், ரச்சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும்” கௌதம் போலீஸில் வாக்குமூலம் அளித்ததார்.  



மற்றொரு சம்பவம்


சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேஷாமி சாஹு(26). இவர் அதே பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே காதலி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக ரேஷாமி சாஹுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கு சண்டை ஏற்பட்டது. இதுகுறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. 


அப்போது தம்தாரி மாவட்டத்தில் டீக்கடையில் மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், ரேஷாமி சாஹு ஆத்திரமடைந்து அருகில் இருக்கும் ஒரு கட்டையை எடுத்து பெண்ணின் தலையில் அடித்துள்ளார். கட்டையால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.


இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷாமி சாஹு என்பவரை கைது செய்தனர்.