ஊடகங்களுடனான உரையாடல்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என நடிகை மாளவிகா மோகனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அனைவரிடத்திலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மாறன்,தங்கலான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் தவிர்த்து மலையாளம்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் மாளவிகா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் பங்கேற்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், நடிகை மாளவிகா மோகனன் ஒரு சங்கடமான கேள்வியை எதிர்கொள்ளும் சூழலும் உருவானது.
அந்த நிகழ்ச்சியில் மாளவிகா மோகனனிடம் நடிகை த்ரிஷா, முதலமைச்சரான விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் போகிறார். அப்படியான வகையில் நீங்களும் அந்த மாதிரி பயணம் போகும் ஐடியா ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினர். இதனைக் கேட்டு ஷாக்கான அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே என்ன மாதிரியான கேள்வி இது என நீங்கள் கேட்கிறீர்கள் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் இதற்கு மாளவிகா மோகனன் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு, தமிழக ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றாலும், அவர்களில் ஓரிருவர், முற்றிலும் தேவையற்றதும் பரபரப்பை ஏற்படுத்துவதுமான மிகவும் அருவருப்பான சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். தளபதி விஜயை நான் கடந்த ஏழு ஆண்டுகளாக அறிவேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; அவரை நண்பர் என்று அழைப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடைய பயணத்தைக் காண்பது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும், இனிவரும் ஊடகங்களுடனான உரையாடல்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருந்தால் நான் மிகவும் பாராட்டுவேன். நன்றி" என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
