நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம், மருது. இந்த படத்தைத் தயாரிப்பதற்காகக் கோபுரம் பிஸிமிஸ் நிறுவனத்திடம் விஷால் கடனாக 21 கோடியே 29 லட்சம் ரூபாய் பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி தர முடியாததால் விஷால், லைகா நிறுவனத்தை அணுகி,  தன்னுடைய கடனை அடைக்குமாறு, கோரிக்கை வைத்திருந்தார். 


அவரது கோரிக்கை ஏற்ற லைகா நிறுவனம், கோபுரம் பிஸிமிஸ் நிறுவனத்திற்கு, கடனை அடைத்தது. மேலும் தங்களது கடன் தொகையான 21 கோடியே 29 லட்சத்திற்கு, 30 விழுக்காடு வட்டியை செலுத்துமாறு விஷாலிடம் தெரிவித்திருந்தது. இதனை ஏற்ற விஷால் 7 கோடி ரூபாய் செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை 2020 ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2, திரைப்படம் வெளியானவுடன் செலுத்தி விடுவதாகக் உறுதி அளித்துள்ளார். 


ஆனால் சொன்ன நேரத்தில் விஷால் பணத்தைக் கொடுக்காததால் வட்டியுடன் சேர்த்து, 30 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 137 ரூபாய் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கூறி லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஆக.18) நீதிபதி ஜி.ஜெயசந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் முன்பே லைகா நிறுவனம் விஷாலிடம் முழு தொகையையும், கேட்டது செல்லாத ஒன்று. ஆகையால் லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து, விஷாலுக்கு அபராதத்துடன் 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறி
வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் . அதில், "நீதி வெல்லும். உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புவேன். லைகா நிறுவனம் எனக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு பொய் என்பதால்,  சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபது செய்துள்ளது. ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என்னைத் துன்புறுத்தியதற்காக, லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 


நடிகர் விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம், சக்ரா. இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய  ஆனந்தன் இப்படத்தை இயக்கி உள்ளார். விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்து, நடித்தி இருந்தார். இந்த படத்தை வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.