Just In





Vairamuthu Appreciates Actress: விஜய் பட இயக்குநர் கொடுத்த வாய்ப்பு.. வைரமுத்துவிடம் இருந்து வந்த போன்கால்.. பாராட்டு மழையில் தமிழ் நடிகை..!
வளர்ந்து வரும் நடிகை தீப்ஷிகாவின் நடிப்பை பாடலாசிரியர் வைரமுத்து பாராட்டி உள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிதாக இருக்கும் நிலையில், கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என பல படங்களில் கமிட் ஆகிருக்கிறார் நடிகை தீப்ஷிகா. இவரை பாடலாசிரியர் வைரமுத்து போனில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
ரேனிகுண்டா, கருப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறாராம்.
இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாயா, மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் பிரபு கதாநாயகனுடன் நடிக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.
வைரமுத்து எடுத்திருக்கும் புதிய முயற்சி
தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடனான படம், இன்னொரு தெலுங்கு படம் என வரிசையாக கமிட் ஆகினார். இதனிடையேதான் வைரமுத்துவின் கனவு காவியமான ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு, அவர் உருவாக்கி வரும் நாட்படு தேறல் என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.
வைரமுத்துவின் பாராட்டு
அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தான் இயக்கியுள்ளார். இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து நிலையில், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த வைரமுத்து அவரை பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து தீப்ஷிகா கூறும் போது, “ “மாநாடு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த சமயத்தில் புதிய நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.. நான் வைரமுத்து பேசுகிறேன் என அவர் பேசியபோது, கூட்டத்தில் இருந்த நான் குழப்பம் ஒருபக்கம், பிரமிப்பு ஒருபக்கம் என ஸ்தம்பித்து போனேன்.. ஒருவேளை யாராவது கலாட்டா செய்கிறார்களோ என்று கூட தோன்றியது..
ஆனால் அதன்பின் பேசுவது வைரமுத்துதான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து பேசுகிறார் தீப்ஷிகா.” என்றார்.