மதுரை பிபி.குளத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது மகன் ஈஸ்வரன் கார்பெண்டராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அவர் மீது கடந்த ஜனவரி 19ஆம் தேதி வரை எவ்விதமான வழக்கும் இல்லை. இந்நிலையில் தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி, எனது மகனை அழைத்துச் சென்று துன்றுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளாகி என் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

 

இது தொடர்பாகவும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தொடர்ந்து தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை தெரிய வராது. ஆகவே தல்லாகுளம் காவல் நிலையத்தில் எனது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.







 



 

அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றிய அதிகாரிகளின் முன் ஜாமீன் மனு - வாரண்ட் பிறபித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு 

 

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.  இதற்கு இடையே வழக்கில் தொடர்புடைய 9 பேர் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

 

இந்நிலையில் அதே வழக்கில் சம்பந்தப்பட்ட தாசில்தார் ரத்னமாலா, துணை தாசில்தார் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த  நீதிபதி முரளிசங்கர், "மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவர்களை கைது செய்ய வேண்டுமானால், உரிய வாரண்டு பிறப்பித்து அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

 



 பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வங்கி கணக்கை, பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம் முடக்கியதற்கு இடைக்கால தடை







 

பட்டுக்கோட்டை, நகராட்சி ஆணையர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனம், தனது ஊழியர்களுக்கான பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் கட்ட வேண்டும். தற்போது நிலுவைத் தொகை 71 லட்சத்திற்கு மேல் உள்ளதால்,  பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக இந்தியன் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நேரங்களில் நகராட்சி சார்பாக செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பட்டுக்கோட்டை நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, " தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் எத்தனை நகராட்சிகள் மீது பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது  குறித்து மத்திய பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யவும், பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம், பட்டுக்கோட்டை நகராட்சி வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்தும் உத்தரவிட்டு வழக்கை விசாரணையை மார்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.