பிரபல சினிமா நடிகை மீது கவிஞர் சினேகன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் அவர் அளித்தப் புகாரில் தனது சினேகம் ஃபவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி (Jayalakshmi) இணையதளம், சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி அதன்மூலம் பணம் வசூலித்து வருவதாகவும் அதனால் தனக்கும் தனது அறக்கட்டளைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


என்ன செய்தார் ஜெயலட்சுமி?


காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சினேகன்(Snehan), "கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறேன். அண்மையில் எனது நண்பர்கள் சிலர் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொன்னார்கள். நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளப் பக்கம், இணையதளப் பக்கம் தொடங்கி அதன் மூலம் நண்கொடை வசூலிப்பதாகக் கூறினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன். அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் என்னிடம் விசாரணை செய்தனர். எனது அறக்கட்டளை வரவு செலவுகளைக் கேட்டனர். அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் கொடுத்துள்ளேன் என்றார்.


நடிகை ஜெயலட்சுமி தன்னை பாஜகவில் ஐக்கியமாக்கிக் கொண்டவர். ஏற்கெனவே இவர் மீது மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடி புகார் நிலுவையில் இருக்கிறது. இவர் சின்னத்திரையில் தான் மிகவும் பிரபலம். வெள்ளித் திரையில் துணை நடிகையாக நிறைய படங்களில் தலைகாட்டியுள்ளார்.




கவிஞர் டூ அரசியல்வாதி:


நடிகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என அறியப்படுபவர்  கவிஞர் சினேகன். ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட  சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன்.  


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் , கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் அதிலும் வெற்றி பெறவில்லை. 


கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்தாண்டு காலம் உதவியாளராக பணிபுரிந்தார். அதன் பிறகு பல வருட காத்திருப்பிற்குப் பின்னர் ‘புத்தம் புது பூவே’ என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராகும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில்  இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் இன்றளவும் ஹிட் லிஸ்டில் உள்ளன. 


கவிஞர் சினேகன் சில மாதங்களுக்கு முன்னர் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது.