லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


சிறப்புக் காட்சிகள் ரத்துக்கான காரணம்


இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் பொங்கல் வெளியீடாக ஒன்றாக வெளியாகின. அப்போது துணிவு படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியின் போது, சென்னை, ரோகிணி திரையரங்கின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர், லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. 


தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை


கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில், அப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சிறப்புக் காட்சிகளுக்காக தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில், தற்போது ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.


லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி


அதன்படி லியோ திரைப்படம் வெளியாகும் அக்.19ஆம் தேதி முதல் அக்.24ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. மாஸ்டர் படத்துக்கு இரண்டாம் முறை இருவரும் கூட்டணி வைத்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை தனது ‘விக்ரம்’ படத்தின் மூலம் பதிவு செய்துள்ள லோகேஷ் மீது எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், லியோ படத்துக்காக விஜய்யுடன் லோகேஷ் மீண்டும் கூட்டணி வைத்தது முதல் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.


முன்னதாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், விஜய் ரசிகர்கள் சிறப்புக்காட்சியாவது இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மேலும் அக்.18ஆம் தேதியே படத்தின் ப்ரீமியர் காட்சிகள் இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.


லியோ மூன்றாவது பாடல்


இன்று லியோ படத்தின் மூன்றாவது பாடலான ‘அன்பெனும்’ பாடல் இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். விஜய் - த்ரிஷாவின் குடும்பம், காதல் பற்றிய பாடலாக இப்பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.