இயக்குநர் லீனா மணிமேகலை ட்விட்டர் பகிர்ந்த புகைப்படம் ஒன்றை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது கனடாவின் டொரண்டோ பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது காளி திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந்தார். இது இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் இருக்கும் ஒரு பெண் புகைபிடிக்கும் விதமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னணியின் தன்பாலீர்ப்பாளர்களின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 


இதனைத் தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதனிடையே  டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் இந்த போஸ்டர் தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதியவும், படத்தின் மீது தடை விதிக்கவும் புகார் அளித்துள்ளார். ஆனால் தன் மீதான எதிர்ப்புகளுக்கு பதிலளித்த இயக்குநர் லீனா மணிமேகலை `ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க’ என தெரிவித்திருந்தார். 






அதேசமயம் உணர்வுகளை துாண்டும் விதமாக உள்ள காளி போஸ்டரை  திரும்ப பெறக் கோரி வலியுறுத்தியுள்ளதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே லீனா ட்விட்டரில் மீண்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கடவுள் வேடம் அணிந்த இருவர் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது. இதை மற்ற இடங்களில் என்ற கேப்ஷனுடன் அவர் முதலில் பதிவிட்டிருந்தார். 


பின் இந்த போஸ்டை குறிப்பிட்டு நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது பற்றி பாஜகவின் ஊதியம் பெறும் ட்ரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவில் இருந்து வரும் சங்க்பரிவார் அமைப்புகள் வெறுப்பு மற்றும் மத வெறியால் நாட்டை அழிக்க நினைக்கிறார்கள். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.