தீபாவளிக்கு இரு முன்னணி நடிகர்கள் படம் வந்தால், தியேட்டர் கிடைக்காது என்கிறார்கள் இன்று. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், தீபாவளி வெளியீடாக ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ் என முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது. போதாக்குறைக்கு மேலும் சில படங்களும் வெளியாகின. அன்றைய தினம் எப்படி இருந்தது வசூல்? என்ன ஆனது வெற்றி? என்பதை இப்போது பார்க்கலாம். 


பாண்டியன்:




ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், டைகர் பிரபாகர், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம். டைகர் பிரபாகர் தனக்காக எழுதிய கதை இது என்றும், அதை ரஜினி விரும்பி கேட்டு, அதில் ரஜினி ஹீரோவாகி, டைகர் பிரபாகர் வில்லன் ஆனார் என்கிற பின்னணி கதையெல்லாம் இந்த படத்திற்கு உண்டு. அந்த அளவிற்கு ரஜினி விரும்பி எடுத்த இத்திரைப்படம். 1992 அக்டோபர் 25 தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆனது. இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் பெரிய அளவில் போகவில்லை என்பது தான் உண்மை. ரஜினியின் சுமார் ரக படங்களின் பட்டியலில் பாண்டியன் இணைந்தது. இந்த படத்தை தழுவி தான் விஜய்யின் போக்கிரி திரைப்படம் இருக்கும் என்பார்கள். போக்கிரி பெற்ற வெற்றியை பாண்டியன் பெறவில்லை.


தேவர் மகன்:




உலகநாயகன் கமல், நடிகர் திலகம் சிவாஜி, நாசர், கவுதமி, வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த திரைப்படம். இசை இளையராஜா. கமல் எழுதிய கதை, திரைக்கதையை பரதன் இயக்கியிருந்தார். தென்மாவட்டத்தில் நடக்கும் ஒரு சமுதாயத்தின் இரு பங்காளிகளுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கமலின் ராஜ்கமன் இண்டர்நேனஷல் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம், கமலின் படங்களில் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றுத்தந்தது. 1992 அக்டோபர் 25 தீபாவளி ரிலீஸ் பந்தயத்தில் முதன்மையாக நின்ற திரைப்படம் தேவர் மகன். பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. 


காவியத் தலைவன்:




விஜயகாந்த், பானுப்பிரியா, நம்பியார், மனோரமா, மஞ்சுளா, நாசர், சார்லி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம். 1992 அக்டோபர் 25 தீபாவளி ரேஸில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு போட்டியிட்டு விஜயகாந்த் களமிறக்கிய திரைப்படம் தான் காவியத்தலைவன். ஆபாவணன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை எழுதிய இத்திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். அரவிந்த் சித்தார்தா இசையில் வித்யாசமான பாடல்கள், புதுவிதமான கதைக்களம் என வெளியான காவியத் தலைவன் , தீபாவளி ரிலீஸ் படங்களோடு போட்டி போட்டது. இருந்தாலும், தேவர் மகன் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 


செந்தமிழ்பாட்டு:




பி.வாசு-பிரபு கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம். 1992 அக்டோபர் 25 தீபாவளி ரேஸில், சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான அன்று, துணிந்து தனது செந்தமிழ்பாட்டு படத்தை ரிலீஸ் செய்தார் பிரபு. பி.வாசுவின் இயக்கத்தில் குடும்ப செண்டிமெண்ட் நன்கு எடுபட்டதால், படம் ஹிட். தீபாவளிக்கு ஓடிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு மத்தியில் செந்தமிழ்பாட்டு திரைப்படம், பாடல், கதை, காமெடி என அனைத்து ஜானரிலும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கமல், சுகன்யா, கஸ்தூரி, சுஜாதா, கவுண்டமணி, விஜயகுமார், மஞ்சுளா, கசன்கான் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம் வணிகரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. விஸ்வநாதன்-இளையராஜா கூட்டணி இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தது. 


ராசுக்குட்டி: 




எத்தனை ஸ்டார்கள் இருந்தாலும் பாக்யராஜ் மாதிரியான மக்கள் கலைஞர்களின் படங்களுக்கு தனிக்கூட்டம் அப்போது இருந்தது. அப்படி ஒரு நம்பிக்கையில் தான் ராசுக்குட்டி படத்தை 1992 அக்டோபர் 25 தீபாவளி ரிலீசில் களமிறக்கினார் பாக்யராஜ். பாக்யராஜ் இயக்கி மீனா பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. பாக்யராஜ், ஐஸ்வர்யா, கல்யாணகுமார், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் நடித்திருந்தனர். அப்போதே ஒரு லட்ச ரூபாய் புடவையை பயன்படுத்தியதாக படத்தின் ஒரு காட்சி பிரமிப்பாக பேசப்பட்டது. மெகா ஸ்டார்களின் படங்களுக்கு நடுவே வெளியான ராசுக்குட்டி, நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் ராசுக்குட்டி தன் வெற்றிக் கொடியை நாட்டினார். 


திருமதி பழனிச்சாமி:




ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்யராஜ் என்றால் ,அந்த வரிசையில் சத்யராஜ் எப்படி வராமல் இருப்பார்? அனைவரின் படமும் தீபாவளி ரிலீஸ் ஆகும் போது, தன் பங்கிற்கு தானும் ஒரு படத்தை இறக்க முடிவு செய்தார் சத்யராஜா. அது தான் திருமதி பழனிச்சாமி. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா, நாசர், கவுண்டமணி, டெல்லிகணேஷ். ரேகா, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்த திரைப்படம். வெற்றி பட இயக்குனர் என்பதால், சுந்தர்ராஜனின் இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. படிப்பறிவு இல்லாத ஒருவர், ஒரு ஆசிரியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அது நடக்கிறது. ஆனால், அது ஒரு நிபந்தனையோடு நடக்கிறது. அது என்ன நிபந்தனை, பழனிச்சாமி மனைவி திருமதி பழனிச்சாமியாக தொடர்ந்தாரா என்பது தான் கதை. இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட்...! படமும், பி, சி என அனைத்து சென்டரிலும் ஹிட். தீபாவளி பந்தையத்தில் பெரிய வசூலை பெற்றது திருமதி பழனிச்சாமி. 


மேலும் இரு படங்கள்!


இது போல, சிவக்குமார் , சுமித்ரா நடித்த சத்தியம் அது நிச்சயம் கணேஷ்-இளவரசி நடித்த மங்களநாயகன் ஆகிய படங்களும் 1992 அக்டோபர் 25 தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகின. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியாகியும், அதில் பாண்டியன் மட்டுமே கொஞ்சம் சுமாராக போனது. மற்ற அனைத்து படங்களும் நினைத்ததை விட பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றன.