நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் கதாநாயகன்களுக்கு இணையாக நடிப்பில் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த கதாநாயகிகள் என்றால் நினைவுக்கு வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல. அந்த வரிசையில் மற்றொரு புதுமையான கதாபாத்திரத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண்.


'ப்ளைண்ட்' என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரவிருக்கும் இப்படத்தினை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. கொரியன் படத்தின் ரீமேக்காக தமிழில் நெற்றிக்கண்ணாக வரவிருக்கும் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தில் ஒரு விபத்தில் கண்பார்வை இழக்கவே அவர் செய்துவந்த வேலையினை இழக்க நேரிடுகிறது. 






இந்நிலையில் சைக்கோ கடத்தல்காரன் ஒருவனால் மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. யாராலும் சைக்கோ யார் என்று கண்டுபிடிக்காத நிலையில், கண்பார்வை இழந்த நாயகி இதனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதைக்களம். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான இதுவும் கடந்து போகும் என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. கொரோனா காலகட்டத்தில் நம்மை காத்திடும் முன்களப்பணியாளர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பிப்பதாக தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த பாடல் இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்று அசத்திவருவது குறிப்பிடத்தக்கது.


யுவனின் மனம் மயக்கும் நைட் ப்ளேலிஸ்ட்..! 


இதுஒருபுறம் இருக்க தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று தணிந்து வரும் நிலையில் மீண்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் பல நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் படங்கள் தற்போது நேரடியாக OTT வழியாக வெளியாகி வருகின்றது. அதேபோல நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படமும் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படக்குழு தற்போதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை.