நடிகர் விமல் நடித்து,  சரவண சக்தி இயக்கி வரும் ஏப்ரல் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘குலசாமி’.  MIK Productions Private Limited தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். தன்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். 


இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்ற நிலையில், விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது: “நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்றபோதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார்.


நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை.  அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.


தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது.. “இந்தப் படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும். ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன். அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன்.


சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் , இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம் , ஷூட்டிங் தொடங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர்.


அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன். அதற்கு சரவணன் இந்தப் படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன், அவர் 3 லட்சத்திலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார்.


அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான், ஆனால் அதன் பிறகு அவர் தரப்பு நியாயங்களுடன் ஆர்யா விலகிவிட்டார். ஒரு வழியாக பேசி கஷ்டப்பட்டு படத்தை முடித்து விட்டோம், படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, "சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் " என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன்.


அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார், அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார், இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது, இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன். உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும்” என்றார்.


காவல்துறை அதிகாரி  ஜாங்கிட் பேசியதாவது: “தம்பி சரவணன் சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள், நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது என்னுடைய டிரைவர் தான், என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது, எனக்கு தமிழ் தெரியாது. ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன். அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன் , அன்றிலிருந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.


படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன், ஆனால் அது மிகக் கடினம் என்பதை புரிந்து கொண்டேன். என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான். ஆனால் சமூகத்திற்கு தேவையான கருத்தை  படத்தில் கூறியுள்ளேன். டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு பேசியுள்ளேன். இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ள கருத்து அனைவரிடமும் சென்று சேர வேண்டும். பத்திரிகையாளர்கள் இதை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி” என்றார்.