தங்கர் பச்சன் இயக்கியிருக்கும் கருமேகங்கள் களைகின்றன திரைப்படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் தங்கர் பச்சன் தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜட் படங்களை விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


தங்கர் பச்சான்


தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால் மக்களை கவர்ந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் என அவரின் பல படைப்புகள் இன்றளவும் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது. சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்திய தங்கர் பச்சான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கியுள்ளார். 


பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். VAU Media  சார்பில் துரை வீரசக்தி கருமேகங்கள் கலைகின்றன படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் அவரது அலுவலகத்தில் வெளியிட்டார்.  இந்நிலையில் நேற்று சென்னையில் இந்தப் படத்தின் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தன. நிகழ்ச்சியில் இயக்குநர் தங்கர் பச்சன் நல்ல சினிமா மக்களிடம் போய் சேருவதற்கான தடைகளைப் பற்றி பேசினார். அப்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜட் படங்களின் மேல் தனது விமர்சனத்தையும் பதிவு செய்தார்.


 எது நல்ல சினிமாவென்று மக்களுக்குத் தெரியவேண்டும்


கிட்டதட்ட 40 படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தபின் என்னுடைய முதல் படமான அழகி படத்தை இயக்கினேன். அப்போது அந்தப் படத்தை வாங்குவதற்கு ஒருத்தர்கூட முன்வரவில்லை. ஒருவழியாக படத்தை வெளியிட்டு மக்கள் கொண்டாடினார்கள். ஒரு நல்ல படம் வெளியாவதற்கு எப்போதும் மக்கள் தடையாக இல்லை. இன்று ஒரு படத்தில் ஒரு பெரிய நடிகர் நடிக்கிறார் என்கிற தகவல் மட்டுமே அந்த படத்தைப் பார்ப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. அதை தவிர்த்து அந்தப் படம் எப்படியான ஒரு கதை என்பதைப் பற்றிய எந்த கவலையும் இல்லை. இந்தப் படங்களில் துப்பாக்கியால் சுடுவது , கொலை செய்வது மாதிரியான காட்சிகள் மட்டுமே இருக்கும். இந்த மாதிரியான படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து மிகப்பெரிய வசூல் எடுக்கின்றன. இந்த படங்களின் வெற்றி மேலும் இதே மாதிரியான படங்களைத்தான் ஊக்குவிக்கும். அதே நேரத்தில் ஒரு நல்ல படத்தை ஆதரித்தால் அது மாதிரி மேலும் பத்து படங்கள் வெளியாகும். ” என அவர் தெரிவித்தார்.


500 கோடி ரூபாய்க்கு படம் எடுத்தால் போதுமா ?


என்னைப்போன்ற ஒரு நல்லப் படத்தை எடுப்பவர்கள் ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க போராட வேண்டியதாக இருக்கிறது. அதே நேரத்தில் ரூ.500 கோடி செலவில் எடுக்கப் படங்களில் என்ன இருக்கிறது? இந்தப் படங்களால் மக்கள் மனதில் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன? அடுத்த தலைமுறைக்கு நாம் எந்த மாதிரியான படங்களை கொண்டு சேர்க்கின்றன என்பதில் நமக்கும் கவனம் தேவை. வணிக ரீதியிலான வெற்றி மட்டுமே ஒரு  நல்ல படத்தின் அளவுகோல் இல்லை.. மக்கள் மனதில் இடம்பெறும் படங்கள் மட்டுமே உண்மையான வெற்றிப் படங்கள்” என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.