பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. 


கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹனகெரே பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இவரது கார் தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மறுபுறம் ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் வலது புறத்தில் பயங்கரமாக மோதியது. 


இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே காரில் பயணித்த உறவினர் அபேக்‌ஷா, ஓட்டுநர் ஸ்ரீகாந்த், சக நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பவித்ரா ஜெயராம் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 






பவித்ரா ஜெயராம் மறைவு திரையுலகினரிடத்திலும், ரசிகர்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஓரளவு குணமடைந்த பிறகே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த பவித்ரா ஜெயராம் கோஜாலி, நீலி, ராதா ராமா என பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ரோபோ ஃபேமிலி என்ற கன்னட படத்திலும் நடித்தார். பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பவித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலைகளில் யாரும் அதிவேகமாக செல்ல வேண்டாம் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 




மேலும் படிக்க: KPY Bala: தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி வென்ற 12 ஆம் வகுப்பு மாணவி - ரூ.1 லட்சம் வழங்கிய KPY பாலா!