Judo Rathnam Death: கடுமையாக உழைப்பது என்பது ஆரோகியமாக வாழ்வதற்கான வழி என வாழ்ந்தவர் தான் ஜூடோ ரத்தினம் என அவரது மறைவு குறித்த இரங்கல் செய்தியில் நடிகரும் மநீம தலைவருமான கம்லஹாசன் குறிப்பிட்டுள்ளார். 


1500 படங்களுக்கு மேல் சண்டை காட்சிகள் அமைத்த ஜூடோ ரத்தினம் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பு அறிந்து பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மறைந்த ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார். 


மறைந்த ஜூடோ ரத்தினம், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி,கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என  அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் சண்டை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 


1959 ஆம் ஆண்டில் தாமரைகுளம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர்,  அதன் பின்னர் 1966 ஆம் ஆண்டில் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். அதன் பின்னர் 1500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.  இறுதியாக தலைநகரம் திரைப்படத்தில்  நடிகராக நடித்து இருந்தார். 


இவரது சிஷ்யர்கள்






இவரிடம் சூப்பர் சுப்பராயன் , ராம்போ ராஜ்குமார், எஃப்இஎஃப்எஸ்ஐ விஜயன், தளபதி தினேஷ் , ஜாகுவார் தங்கம்  , பொன்னம்பலம் , ஜூடோ. கே.கே.ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், அம்பூர். ஆர்.எஸ். பாபு மற்றும் எம். ஷாஹுல் ஹமீத் அவருக்கு போராளிகளாகவும் உதவியாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். 


அவரது மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆவார். அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் படங்களில் ஸ்டண்ட் செய்து வருகிறார்கள். 


இவர் நடிகராக நடித்த படங்கள்


1959ஆம் ஆண்டு  தாமரைக்குளம் என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பின்னர் சில கால இடைவேளையில், கொஞ்சம் குமரி (1963),  காயத்ரி (1977), போக்கிரி ராஜா (1982 ), நாணயமில்லாத நாணயம் (1984 ), பொண்ணுக்கேத்த புருஷன் (1992 ) ஆகிய படங்களில் நடித்த இவர் இறுதியாக கடந்த 2006ஆம் ஆண்டு சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.  அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 


இவர் தயாரிப்பில் உருவான படம்


சினிமாவில் நடிகராகவும் , ஸ்டண்ட் மாஸ்டராகவும் இருந்த இவர் 1980அம் ஆண்டு  ஒத்தையாடி பாதையிலே எனும் படத்தினை தயாரித்தும் உள்ளார். இதன் பின்னர் அவர் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. 


இவர் பெற்ற விருதுகள்


1200 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உலக சாதனை படைத்ததற்காக  2013ஆம் ஆண்டு  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது . அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.