நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பொன்னியின் செல்வன் பட பாகங்களுக்குப் பிறகு கோலிவுட் தாண்டி பான் இந்தியா ரசிகர்களையும்  கவர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவி தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வருகிறார்.


கிருத்திகாவுடன் கைக்கோர்க்கும் பொன்னியின் செல்வன்


பொன்னியின் செல்வன் படத்தில்  டைட்டில் கதாபாத்திரத்தில் அருண்மொழி வர்மன் / பொன்னியின் செல்வனாகத் தோன்றிய ஜெயம் ரவி, இப்படத்தின் மூலமாக முதன்முறையாக மணிரத்னத்துடன் கூட்டணி வைத்தார்.


பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், தற்போது ஜெயம் ரவி இயக்குநர் கிருத்திகா உதயநிதியுடன் தன் அடுத்த படத்துக்காக கைக்கோர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி, இறுதியாக ஜீ5 தளத்தில் வெளியாக பேப்பர் ராக்கெட் தொடரை இயக்கியிருந்தார்.


நித்யா மேனன் ஹீரோயின்


இந்நிலையில், ஜெயம் ரவியின் 33ஆவது படமான இப்படத்தை கிருத்திகா இயக்குவதாகவும், நடிகை நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் இப்படத்துக்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் எனவும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கெனவே ஜெயம் ரவி என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இயக்கத்தில் நடித்த இறைவன் திரைப்படம் வெளியீட்டுகுத் தயாராக உள்ளது. இந்த் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன் தாரா நடிக்கும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்  வெளியாகி கவனமீர்த்தது. 


வரிசைக்கட்டி வரும் ஜெயம் ரவி படங்கள்


அதேபோல் ஜெயம் ரவி இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் பிரியங்கா மோகன் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார். அதேபோல் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் உடன் கூட்டணி வைத்து ஜெயம் ரவி சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


ஏற்கெனவே இந்தப் படங்கள் வரிசைக்கட்டி வர உள்ள நிலையில், தற்போது அடுத்த பட்ம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக ப்ரியா பவானி சங்கருடன் ஜெயம் ரவி இணைந்து நடித்த அகிலன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.