சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள ஆவின் பால் பண்ணைக்கு சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 5.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2.30 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டுகளாக தயார் செய்து சேலம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


மீதமுள்ளவைகளில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கும், இதில் மீதமுள்ள ஒரு லட்சம் லிட்டர் பால் உபபொருட்களான வெண்ணெய், பன்னீர், நெய், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு சேலம் பால் பண்ணையில் இருந்து அல்ட்ரா ஹிட் டிரீட்மென்ட் என்ற சிறப்பான முறையில் பால் பாக்கெட்டுகள் தயாரித்து 9 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் சேலம் ஆவின் பால் பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் பண்ணையில் உள்ள பால் உற்பத்தி ஆலை, பால் உபபொருட்கள் தயாரிக்கும் ஆலை மற்றும் பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பால் பாக்கெட்டுகள் சுகாதாரமான முறையில் பால் தயாரிக்கப்படுகிறதா? மற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.



பின்னர், சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்தை பொறுத்தவரை பால்வளத்துறை மிக முக்கியமானது. மக்களையும் அரசையும் இணைக்க கூடிய, கட்டிப்போட்டு உள்ள துறை விளங்குகிறது. ஆவினுடைய மேம்பாட்டிற்காக என்னை பணியில் தமிழக முதல்வர் ஈடுபடுத்தி உள்ளார். தமிழகத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் தரமான பால்யும், பால் பொருட்களையும் குறைத்த நேரத்தில், சரியான விலையில் பெறவேண்டும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் அதற்கான பலனை கூடிய விரைவில் பார்க்கலாம், இதில் எந்த மந்திரமும் போட முடியாது என்றும் கூறினார். நிர்வாகத்தில் பல்வேறு புதிய சீர்திருத்தத்தை கொண்டு வரமுடியும், நிர்வாகத்திற்கு எந்தெந்த வழியில் நஷ்டங்கள் செலவுகள் ஏற்படுகிறது என்பதை பார்த்து சீர்செய்ய முடியும், ஆவின் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வருகிறார்களா? பணிகளை செய்கிறார்களா? என்பதை முறைப்படுத்த முடியும்" என்று கூறினார்.



"கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்தினால் நமது செயல்பாட்டை பெருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளோம். விவசாய மக்களை இணைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுப்போம். பால்வளத் துறை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு 100 சதவீதம் முழுமையாக எங்களது பணியை மேற்கொள்ளவும், மற்றும் நிர்வாக சீரமைப்பில் 100 சதவீதம் மாற்றம் இருக்காது எனவும் கூறினார். ஆவின் நிர்வாகத்தில் முறையான இலக்குகளை வைத்து பணிகளை கொண்டு செல்வோம். இதை நான் மட்டும் எடுக்க முடியாது ஒத்துழைப்புடன் பணிகளை செய்வோம்" எனவும் உறுதியளித்தார். தமிழகத்தில் வெண்மை புரட்சி என்பதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான பணிகளை நிச்சயம் மேற்கொள்வோம் எனவும் பேசினார்.