Jai Bhim Issue: ஜெய் பீம் - சூர்யாவுக்கு பெருகும் இயக்குநர்களின் ஆதரவு!
நடிகர்களில் கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்டோரை தவிர்த்து சூர்யாவின் சமகால நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.

ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒளிவு மறைவுமின்றி எடுத்து வைத்திருக்கிறது.
அதேசமயம் ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாக வன்னியர் சங்கம் சார்பாக சூர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி சூர்யா எங்கும் நடமாட முடியாது எனவும், அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பாமக மாவட்ட செயலாளர் பேசியதும், அதற்கு ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மௌனம் காப்பதும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகர்களில் கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்டோரை தவிர்த்து சூர்யாவின் சமகால நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“‘ஜெய் பீம்’ மிக முக்கியமான படம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்சட்டத்திற்குள் கட்டமைப்பிற்குள் எவ்வாறு நீதி வழங்கப்படுகிறது என்பதைக் காட்டி அனைவருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. எனவே ‘ஜெய் பீம்’ பாருங்கள். ஒரு படத்தை விமர்சிக்கலாம் ஆனால், அப்படத்துக்குத் தடை கோருவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் கண்டிக்கத்தக்கது'” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சூர்யாவுக்கு ஆதரவாக #WE Stand With Surya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்